யார்ரா அந்த பையன்.. நான் தான் அந்த பையன்.. புதுப்பேட்டையில் கொக்கி குமாராக ரவுண்டு கட்டிய தனுஷ்!
சென்னை: யாருப்பா இந்த பையன்... எலும்பும் தோலுமா இருக்கான்.. இவனெல்லாம் ஹீரோவா என ஏலனமாக பேசியவர்களை தன்னுடைய நடிப்பின் மூலம், புதுப்பேட்டை படத்தின் மூலம் நிமிர்ந்து பார்க்க வைத்தார் நடிகர் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகளில் நிறைவு செய்கிறது. இந்த படத்தை பற்றிய சுவாரசியமான செய்தியை இதில் பார்க்கலாம்.
தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு, இதே நாளில் தியேட்டரில் வெளியான திரைப்படம் தான் புதுப்பேட்டை. இந்த திரைப்படத்தில் தனுஷ், அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படம் ஆரம்பிக்கும் போது தனுஷினுடைய அம்மாவை அவருடைய அப்பா கொன்றுவிடுவார். தன்னையும் அப்பா கொன்றுவிடுவார் என்ற பயத்தில், ஊரைவிட்டே ஓடி வந்து, சாப்பாட்டுக்கு வழியில்லாமல்,
தொண்டையில் ஆபரேஷன்... தொண்டையில் ஆபரேஷன் என வேஷம் போட்டு, பயந்தாங் கொல்லியாக இருப்பார் தனுஷ். சாப்பாட்டுக்கே வழியே இல்லாம சுத்தி திரிந்த தனுஷ் பிற்காலத்தில் புதுப்பேட்டையை எப்படி ஆட்டிப்படைத்தார் என்பது தான் படம்.

புதுப்பேட்டை: காதல் கோட்டை, 7ஜி ரெயின்போ காலனி என காதல் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த செல்வராகவன் இறங்கி எடுத்த கேங்ஸ்டர் திரைப்படம் தான் புதுப்பேட்டை. தமிழ் சினிமாவிற்கு கேங்ஸ்டர் திரைப்படம் ஒன்றும் புதுசு இல்ல, நாயகன், தளபதி, பாஷா என பல கேங்ஸ்டர் திரைப்படத்தை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், அந்த படத்தில் ஹீரோ கெட்டவனாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்பவராக காட்டி இருப்பார்கள். ஆனால், புதுப்பேட்டை படத்தில் உண்மையில் ஒரு ரௌடி வாழ்க்கையில் எப்படி இருப்பான் என்பதை எதார்த்தமாக அப்பட்டமாக காட்டி இருந்தார் இயக்குநர் செல்வராகவன்.
தமிழ்செல்வன்: வழக்கமாக கேங்ஸ்டார் திரைப்படத்திற்கு என்று இருக்கும் லாஜிக்கை எல்லாம் உதரி தள்ளிவிட்டு இறங்கி அடித்து ரத்தமும், சதையுமாக கொடுத்து இருப்பார் இயக்குநர். 'தொண்டையில் ஆபரேஷன்' என வேஷம் போட்டு பிச்சை எடுக்கும் ஹீரோ, ரோட்டில் நின்னு ஒவ்வொருத்தனையாக கூப்பிடும் சினேகாவின் கதாபாத்திரத்தை எல்லாம் இதற்கு முன் தமிழ் சினிமா பார்த்திராத ஒன்று. அதே போல, அமைதிப்படை அம்மாசை, முதல்வன் படத்தில் வரும் அரங்கநாதன், ஆயுத எழுத்து படத்தில் வரும் செல்வநாயகன் என தமிழ்சினிமா மறக்கமுடியாத, அரசியல்வாதி வில்லன்களின் வரிசையில் புதுப்பேட்டை படத்தில் வரும் தமிழ்செல்வன் கதாபாத்திரத்தை சொல்லலாம். அந்த அரசியல்வாதி வில்லன் ரோலில் நடித்திருந்த அழகன் பெருமாள், நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தார். ஸ்கிரினுக்கு பின் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு, மக்களுக்கு முன் வந்து செந்தமிழ் தலைவன் நான்.. தமிழ் தாயின் புதல்வன் நான் என அவரின் நக்கல் கலந்த நடிப்பு பேச்சும் படத்தில் அட்டகாசமாக இருக்கும்.
முதல் பாதி சூப்பர்: கொங்கி குமார், கிருஷ்ணவேலி, மணி, மூர்த்தி, அன்பு, செல்வி என பலர் இந்த படத்தின் கதையோடு ஒன்றி நடித்திருந்தார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பாலகுமாரனின் வசனத்தை சொல்லாம். சாப்பாட்டுக்காக தொண்டையில் ஆப்ரேஷன் என பிரச்சை எடுத்த ஒரு சின்ன பையன், உயிர் பயந்தால், அந்த ஏரியாவையே ஆட்டிப்படைத்த அன்பு முன்னாடி நின்று "நீ என்ன உயிரோட விட்டா நான் உங்கள உயிரோட வீடுவேன்" என்று சொல்வதும். தன்னுடைய அப்பா உட்பட, என்னுடைய எதிரிகள், துரோகிகளை ஒரே நைட்டில் வீழ்த்துவது என முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
மிரட்டிய தனுஷ்: சினிமாவிற்கு வந்து ஒன்று இரண்டு படத்தில் மட்டுமே நடித்திருந்த நடிகர் தனுஷ், புதுப்பேட்டை படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் எடுத்திருந்தார். இப்படி ஊசி போல இருப்பவனா... கேங்ஸ்டர் என யாரும் கேள்வி கேட்காத அளவிற்கு இயல்பான நடிப்பை கொடுத்திருந்தார் தனுஷ். இதற்கு தகுந்தார் போல, செல்வராகவனும் படத்தை எடுத்து இருந்தார். படம் முழுக்க தனுஷ், ஒரு சுயநலமாக கொக்கி குமாராகவே, சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி, நல்ல, கெட்டது, அன்பு, பாசம், விஸ்வாசம் என எதையுமே பாக்காமல் ஒரு சுயநலவாதியாகவே நடித்திருந்தார். கிருஷ்ணவேலி மேல் ஆசைப்பட்டு அவருடன் பழகியது, கிருஷ்ணவேணிக்காக அன்புவை எதிர்த்து சண்டை போட்டது, நண்பனின் தங்கை சொல்வியை பார்த்ததும், அந்த பெண்ணின் அனுமதி இல்லாமல் தாலி கட்டியது, பின் அண்ணனை கொலை செய்துவிடுவேன் என செல்வியுடன் உடலுறவு வைத்துக்கொள்வது என ஒவ்வொரு காட்சியிலும், தனுஷ் கொக்கி குமாராகவே ஜெயித்து இருப்பார்.

படத்தின் ஹைலைட்: புதுப்பேட்டை படத்திலேயே ஹைலைட்டான சீன், வேட்பாளர் பெயரை அறிவிக்கும் சீன் தான். அந்த ஒரே ஒரு சீன் படத்தின் போக்கையே அப்படியே மாற்றவிடும். அதில், வேட்பாளராக சீட்டு கேட்கும் தனுஷ், என் சக்தி இருக்கும் போதே... என்கிட்ட பணம் இருக்கும்போதே.. என் கத்திக்கு பயம் இருக்கும் போதே... நான் செட்டில் ஆக வேண்டும். தினமும் கழுத்துக்கு போல தலை இருக்கா என்று தொட்டு பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்பதும், தனக்கு சீட்டு கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், அத்தனை பேர் முன்னாடியும் கத்தி எடுத்து, இத்தனை நாளான நான் தான் எல்லாம் என நினைத்து இருந்த கொக்கி குமாருக்கு, அந்த இடத்தில் இருந்து தான் வீழ்ச்சியே ஆரம்பமாகும். இந்த படத்தின் மிக முக்கியமான சீன் இதுதான், இந்த காட்சியில் வரும் வசனமும், இந்த காட்சி படமாக்கப்பட்ட விதமும் உண்மையில் சூப்பராக இருக்கும். இந்த படத்தின் கதை சிறையில் இருந்து தனுஷ் சொல்வது போலத்தான் ஆரம்பமாகும். செல்வராகவனின் மற்ற படத்தை போல இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சோகமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு கடைசியில் சரியான ட்விட் கொடுத்து, தனுஷ்சை ஒரு அரசியல் தலைவராக்கி, அதுவும் கல்வி அமைச்சராக்கி படத்தை முடித்து இருப்பார் செல்வராகன்.
காலம் கடந்து கொண்டாடப்படும் படம்: இந்த படத்தை பார்த்து பலரும் தனுஷின் நடிப்பை பாராட்டினார்கள், ஆனால், இந்த படத்திற்காக தனுஷுக்கு எந்தவிதமான விருதும் கிடைக்க வில்லை என்பது வேதனையான விஷயம். அதேபோல, இந்த படம் வெளியான போது, ரத்தமும், வன்முறைமும் படத்தில் அதிகமாக இருக்கு... ஒரு கால் கேர்ளை படத்தின் ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள முடியாது.. இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியாது.. என பல விமர்சனம் வந்ததால், பெரும்பாலானோரை இந்த படம் சென்றடையவில்லை. ஹேராம், அன்பே சிவம், கற்றது தமிழ் போன்ற படங்களை போல புதுப்பேட்டை படமும் காலம் கடந்து தற்போது இந்த படத்தை பலர் கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











