நடிகை சரண்யாவை ஒரே வரியில் புரபோஸ் செய்து திருமணம் செய்த நடிகர் பொன்வண்ணன்...ஃப்ளாஷ்பேக் லவ் ஸ்டோரி
சென்னை: பொதுவாக ஒரே துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல காதல் ஜோடிகள் திருமண வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களில் நடிகர் பொன்வண்ணன் மற்றும் நடிகை சரண்யா தம்பதியை பற்றி அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் சரண்யா கொடுத்துள்ள ஒரு பேட்டியில், பொன்வண்ணன் எப்படி தன்னிடம் காதலை சொன்னார் என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

பாரதிராஜா அசிஸ்ட்டண்ட்
இயக்குனர் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் பொன்வண்ணன். அப்போதே தன்னுடைய படங்களில் பொன்வண்ணனை நடிக்கவும் வைத்தார் பாரதிராஜா. புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி, அதன் பின் கருத்தம்மா, பசும்பொன் உள்ளிட்ட படங்களில் பொன்வண்ணனை நடிக்க வைத்திருப்பார்.

இயக்குநர் பொன்வண்ணன்
அதன் பிறகு அன்னை வயல், ஜமீலா மற்றும் கோமதி நாயகம் ஆகிய மூன்று சிறிய திரைப்படங்களை இயக்கவும் செய்தார். இடையில் அண்ணாமலை என்கிற சீரியலில் கோமதி நாயகம் என்ற நகைச்சுவை வில்லனாகவும் நடித்திருந்தார். பலராலும் நடிகராக மட்டுமே அறியப்பட்ட பொன்வண்ணன் பருத்திவீரன் திரைப்படம் மூலம் சினிமாவில் தனது சகெண்ட் இன்னிங்ஸை தொடங்கினார்.

சரண்யாவுடன் அறிமுகம்
கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன் முறையாக சரண்யாவை சந்தித்திருக்கிறார் பொன்வண்ணன். அந்தப் படத்திலும் அவர்கள் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்பார்கள். ஆனால் படத்தின் அசோசியேட்டாக இருந்ததால் ஷூட்டிங்கில் எப்பவுமே அவர் பிஸியாக இருந்ததாகவும், தன்னிடம் பேசியது கூட இல்லை என்றும் சரண்யா கூறியுள்ளார். அப்படி இருந்தவர் திடீரென்று ஒரு நாள் சரண்யாவிற்கு ஃபோன் கால் செய்தாராம்.

ஒரே வரியில் புரபோஸல்
மறுமுனையில் சரண்யா எடுத்துப் பேச,"நான் இயக்குனராக போகிறேன். உங்களது கால்ஷீட் வேண்டும்" என்று கேட்டுள்ளார். எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று சரண்யா கேட்க, 70 ஆண்டுகள் வேண்டும் என்று பொண்வண்ணன் பதில் சொல்ல, எதற்காக கால் செய்தார் என்று உடனே சரண்யாவிற்கு புரிந்து விட்டதாம்.
மேற்கொண்டு,"ஏதோ விளையாட்டாக திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் என் காதலை மறுத்து விட்டால் நான் ஒன்றும் செய்து கொள்ளப் போவதில்லை". அதனால் யோசித்து உங்களது முடிவை கூறுங்கள் என்று பொன்வண்ணன் கூறிவிட்டு ஃபோன் காலை கட் செய்துவிட்டாராம். விளையாட்டுத்தனமாக பொன்வண்ணன் பேசுகிறார் என்று தன் தந்தையிடம்தான் முதலில் சரண்யா கூறியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு திருமணம் மூலம் அவர்கள் கணவன் மனைவியானது ஊரறிந்த விஷயம்.


Click it and Unblock the Notifications











