சாக்லேட் ஹீரோ.. கேரக்டர் ஆர்டிஸ்ட்.. சக்ஸஸ்ஃபுல் ரைட்டர் - அசத்தல் ஆல்ரவுண்டர் சித்தார்த்!
சென்னை : சாக்லேட் பாயாக நடித்து இளம்பெண்களின் இதயம் கவர்ந்த சித்தார்த் தற்போது தேர்ந்தெடுக்கும் படங்களின் மூலமாக எல்லாப் பிரிவு ரசிகர்களின் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறார். அவருக்கு இன்று 39-வது பிறந்தநாள்.
மணிரத்னம் அசிஸ்டென்டாக பணியாற்றி, 'பாய்ஸ்' படத்தில் முன்னாவாக நடித்த சித்தார்த், தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகர் எனப் பெயர் பெற்று வருகிறார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் இயக்குநர்களின் முதல் சாய்ஸாக இருக்கும் சித்தார்த் தயாரிப்பாளர், கதாசிரியர் என தனது புரொஃபஷனிலும் அவ்வப்போது வெரைட்டி காட்டி வருகிறார்.

சித்தார்த்
சினிமா மீது கொண்ட பெரும் தாகத்தில் ஜெயேந்திரா, பி.சி.ஶ்ரீராம் ஆகியோரியம் உதவியாளராகவும் பின்னர் டைரக்டர் மணிரத்தின் அசிஸ்டென்டாகவும் பணியாற்றிவந்த சித்தார்த் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் பாஸிங்கில் தன் முகத்தைத் திரையில் காட்டினார். அப்போது அவரும், மணிரத்னமும் கூட அவர் இந்திய சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வருவார் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்க விரும்பும் இயக்குநர்களின் நினைவுக்கு முதலில் வரும் நடிகராக இருக்கிறார் சித்தார்த்.

சுஜாதாவால் அறிமுகம்
ஷங்கர் 'பாய்ஸ்' படத்துக்கு ஆடிஷன் நடத்தும்போது, 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் சுஜாதா, சித்தார்த்தை ஷங்கரிடம் அறிமுகப்படுத்தி வைக்க, 'பாய்ஸ்' பட ஆடிஷனில் கலந்துகொண்டார் சித்தார்த். பிறகு, அந்தப் படத்தின் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமானார் சித்தார்த். வாழ்க்கை பற்றிய எதன் மீதும் தெளிவற்ற இளைஞர்களில் ஒருவராக அந்தப் படத்தில் நடித்திருந்தார்ட் சித்தார்த். படத்தில் அவரது கேரக்டரும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மணிரத்னம் படம்
பாய்ஸ் பட அறிமுகத்தின் மூலம் பிரபலமான தனது அசிஸ்டென்ட் டைரக்டர் சித்தார்த்தை தான் அடுத்து இயக்கிய 'ஆயுத எழுத்து' படத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம். இந்தப் படத்தில் சித்தார்த்தின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருந்தது. பிறகு தெலுங்கு பக்கம் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார் சித்தார்த். தெலுங்கில் சில படங்கள் நடித்தவர், பாலிவுட்டில் 'ரங் தே பஸந்தி' படத்திலும் நடித்தார். ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கவனிக்கப்பட்டார்.

மீண்டும் தமிழில்
தெலுங்கு, இந்தியில் முழுமையாக இறங்கிய சித்தார்த் சில வருடங்களுக்குப் பிறகு தமிழில் 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய கல்ட் படமான 'ஜிகர்தண்டா'வில் நடித்த சித்தார்த் அதன் பிறகு வித்தியாசமான கதை சொல்லல் முயற்சிகளை அங்கீகரிக்கும் நடிகராக உருமாறினார். 'ஜிகர்தண்டா' படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த் இருவரின் நடிப்புமே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

வித்தியாசமான கதைகள்
வசந்தபாலன் இயக்கிய பீரியட் ஃபிலிமான 'காவியத் தலைவன்' படத்தில் பாகவதர் கெட்டப்பில் வந்து நடிப்பில் ஈர்த்த சித்தார்த், 'லூசியா' படத்தின் ரீமேக்கான 'எனக்குள் ஒருவன்' படத்தில் வெறித்தனம் காட்டினார். தமிழில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான திரைக்கதை அமைப்பு கொண்ட 'ஜில் ஜங் ஜக்' படத்திலும் ஹீரோவாக நடித்து அசத்தினார் சித்தார்த். நடிகராகவே தொடர்ந்து நடித்து, இயக்குநர் கனவை புதைத்து வைத்துக்கொண்டிருந்த சித்தார்த் கதை எழுத 'அவள்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது.

வில்லன்
பேய்ப்படங்கள் ரசிகர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டும் ட்ரெண்டுக்கு இடையே நிஜமாகவே பயமுறுத்தும் பேய்க்கதை எழுதினார் சித்தார்த். 'அவள்' படம் நல்ல வரவேற்பு பெற்றது. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற எல்லைகளை எல்லாம் பல நடிகர்கள் காற்றில் பறக்கவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சித்தார்த்தும் ஹீரோ இமேஜை விட்டு விலகி கதைக்காக நடிக்கத் தொடங்கி பல வருடங்களாகிவிட்டது. தற்போது மலையாளத்தில் உருவாகியிருக்கும் 'கம்மார சம்பவம்' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

டைரக்டர்
தயாரிப்பாளராக சில படங்களைத் தயாரித்திருக்கும் சித்தார்த் கதாசிரியராகவும் அறிமுகமாகிவிட்டார். ஆனால், அவரது கனவான இயக்குநர் அவதாரம் விரைவில் நிறைவேறலாம். சித்தார்த் தனது படங்கள் சோதனை முயற்சிகள் எனக் கூறப்படுவதை எப்போதும் விரும்புவதில்லை. அவரைப் பொறுத்தவரை அது தான் கற்றுக்கொண்டு செயல்படுத்தும் சினிமாவுக்கான ஒரு வழிமுறை. அவ்வளவுதான். அதில் வெற்றி என்பது இரண்டாம் பட்சம். முயற்சி மட்டுமே பேசப்படவேண்டியது. பெஸ்ட் ஆஃப் லக் அண்ட் ஹேப்பி பர்த்டே சித்தார்த்!


Click it and Unblock the Notifications











