‘அந்த பஃபூனே நான் தாங்க’.. வடிவேலு சொன்ன அனுபவ கதை.. பாவம் மனுஷன் ரொம்ப கஷ்டப்பட்டுருக்காரு போல!
சென்னை: நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து பிரத்யேக பேட்டியளித்த நடிகர் வடிவேலு சொன்ன பஃபூன் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், மீண்டும் ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ம் புலிகேசி நடிகர் வடிவேலுவை பாடாய் படுத்தி விட்டது.
கட்டம் சரியில்லை என்றால் கஷ்டம் யாருக்கு வேண்டுமானாலும் வரும் என்பது போல புகழின் உச்சியில் இருந்த வைகைப் புயல் வாழ்வில் பெரிய சூறாவளியே வந்து சென்றதை அவரது ஸ்டைலிலேயே சொல்லி அசத்தி உள்ளார் மனுஷன்.

ரெட் கார்டு நீக்கம்
இயக்குநர் ஷங்கருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு புதிய படங்களில் நடிக்க முடியாத படி நடிகர் வடிவேலுவுக்கு தடை விதிக்கப்பட்டது. சுமார் 4 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் தான் சுமூக பேச்சுவார்த்தைகள் மூலம் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்து தடை நீக்கப்பட்டது.

மீண்டும் சினிமாவில்
லைகா தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கப் போகிறார். அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போட்டோஷூட்டும் சமீபத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவில் கலக்கலாக நடைபெற்றது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ள நிலையில், பிரத்யேக பேட்டி ஒன்றை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் வடிவேலு கொடுத்தது வைரலாகி வருகிறது.

புயல் அல்ல சூறாவளி
நடிகர் வடிவேலு பேசுகையில், "என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் என் மனதில் பட்டதை பேசுகிறேன். நான் அனுபவித்த துன்பத்தை போல் வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. என்னை அனைவரும் 'வைகைப்புயல்... வைகைப்புயல்..' என்று சொல்வார்கள். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலையே சந்தித்துவிட்டேன்." என்றார்.

சோக ஸ்டோரி
நோயாளி ஒருவர் டாக்டரை சந்தித்து, 'எனக்கு மனசு சரியில்லை. தூக்கம் வரவில்லை. ஏதாவது மருத்துவம் பாருங்க..?' என கேட்டார். அதற்கு மருத்துவர்,' இன்று சனிக்கிழமை.. நாளை ஞாயிற்றுக்கிழமை.. நாளை மறுநாள் திங்கட்கிழமை வாருங்கள். உனக்கு வைத்தியம் பார்க்கிறேன்' என்று பதிலளித்தார். அதற்கு அந்த நோயாளி,' முடியவே முடியாது. எனக்கு இப்போதே மருத்துவம் பாருங்கள். என்னை காப்பாற்றுங்கள்.' என கேட்டுக்கொண்டார். அதற்கு மருத்துவர்,' நிச்சயம் நீங்கள் திங்கட்கிழமை வாருங்கள். உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்.' என பதிலளித்தார்.

மனசு சரியில்லை
மறுபடியும் நோயாளி, 'தனக்கு தூக்கம் வரவில்லை.' என சொல்ல, மருத்துவர், 'பேசாமல் ஒன்று செய்யுங்கள். பக்கத்தில் ஒரு சர்க்கஸ் நடக்கிறது. அந்த சர்க்கஸில் உள்ள பபூன் பிரமாதமாக காமெடி செய்வார். அதை பார்ப்பதற்காக எனக்கும் என் மனைவிக்கும் என இரண்டு டிக்கெட்களை எடுத்திருக்கிறேன். என்னுடைய மனைவிக்கான டிக்கெட்டை நான் உங்களிடம் தருகிறேன்.

அந்த பஃபூனே நான் தாங்க
நீங்களும், நானும் அந்த சர்க்கஸிற்கு சென்று பபூன் செய்யும் காமெடியை பார்ப்போம். அந்தக் காமெடியை பார்த்தால் உனக்கு உன்னுடைய துன்பம் எல்லாம் பறந்துவிடும். தூக்கமும் வரும்.' என்றார். அதற்கு அந்த நோயாளி டாக்டரிடம்,' அந்தப் பபூனே நான் தாங்க' என சொன்னார்.
கிட்டத்தட்ட நானும் அந்த பபூன் அளவில் தான் தற்போது இருக்கிறேன். கடந்த நான்காண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுளின் ஆசி தான் காரணம்" என்றார்.

கணவன் இறந்தாலும்
கடந்த இரண்டு வருடத்தில் கொரோனா அனைவரின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. மகன் - தாயை பார்க்க முடியவில்லை. மகள் - தந்தையை பார்க்க முடியவில்லை. கணவன் - மனைவியை பார்க்க முடியவில்லை. மகனோ, மகளோ வெளிநாட்டில் இருந்தாலும் கூட, அவர்களுக்கு விசா கூட கிடைக்காது. அடுத்த தெருவில் மட்டுமல்ல.. தன்னுடைய வீட்டில் கணவன் இறந்தாலும் கூட, மனைவி மாடியில் நின்று கொண்டு, 'அவரை சீக்கிரம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.

பிரச்சனை முடிந்தது
என் பிள்ளைகளுக்கும் அந்த கொரோனா வந்துவிடும்' என கவலையுடன் தெரிவித்த காலகட்டம் அது. கொரோனா வந்து என்னுடைய பிரச்சனையை சாதாரண பிரச்சினையாக்கி, மற்றவர்களின் பிரச்சனையை பெரிசாகி விட்டது. கொரோனா எல்லோரையும் அச்சுறுத்தி, மிரள வைத்து விட்டது என தனது சொந்த கதை சோகக் கதையை முடித்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
மீண்டும் வைகைப் புயல் வடிவேலு சினிமாவில் நடிக்கப் போவதை அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். "தலைவன் திரும்பி வந்துட்டான்", "வடிவேலு இஸ் பேக்" என ஏகப்பட்ட மீம்களை போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

சந்திரமுகி 2
இயக்குநர் சுராஜின் படத்தில் மட்டுமின்றி இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள சந்திரமுகி 2 படத்திலும் நடிகர் வடிவேலு நடிப்பார் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. நடிகர் விவேக் மறைந்த நிலையில், அவரது இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாகவும் பேட்டியில் வடிவேலு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











