குஷ்புவுக்கு ஆதரவாக பேசிய சுஹாஸினி மீதான வழக்குகளும் ரத்து

திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும், அப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது பால்வினை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் குஷ்பு பத்திரிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.
மேலும் தமிழகத்தில் பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர் மீது 22 வழக்குகள் தொடரப்பட்டன.
தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி வழக்குத் தொடர்ந்தார் குஷ்பு.
இந்த நேரத்தில், குஷ்வுக்கு ஆதரவாக நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாஸினி ஒரு நிகழ்ச்சியில் ஆவோசமாகப் பேசினார்.
"குஷ்புவுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது நான் அமெரிக்காவில் இருந்தேன். யாரும் என்னிடம் அது பற்றி கருத்து கேட்கவில்லை. பிரச்சனையை வெற்றிகரமாக சந்தியுங்கள் என்று குஷ்புவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன்.
1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அது ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்களுக்கு இல்லையா? நான் இப்படி பேசினால் என்னை பரமக்குடிக்கு அனுப்பி விடுவீர்களா? உங்களுக்கு என்ன இரண்டு கொம்பா முளைத்திருக்கிறது?
வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வாழ வந்த ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதற்காக ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும்.
எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ஒரு கருத்தை சொன்னார். அதை புரிந்து கொள்ளாமல் அவரை அவமானப்படுத்தி விட்டீர்கள். இதற்காக தமிழர்கள் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார் சுஹாசினி.
இதையடுத்து சுஹாசினி மீதும் பல்வேறு தரப்பின் சார்பில் 8 வழக்குகள் தொடரப்பட்டன.
இந் நிலையில், திருமணத்திற்கு முந்தைய உறவு பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவுக்கு எதிராக, தொடரப்பட்ட 22க்கும் மேற்பட்ட வழக்குகளையும் இரு தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சுஹாசினி மீதான 8 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் சுஹாசினி மீது உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











