ரஜினிகாந்த்தை அழைத்து வர சிங்கப்பூர் போனார் மகள் ஐஸ்வர்யா

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி, 'ராணா' படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையில் குணப்படுத்த முடியாததால், அவர் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் டாக்டர்கள், அவருடைய நோய்க்கான மூலகாரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள். அதன் பிறகு அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
என்றாலும், அவர் ஒருமாத காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி, ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். டாக்டர்கள் தினமும் அந்த வீட்டிற்கு சென்று ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள்.
சிகிச்சை முழுவதும் முடிவடைந்து ரஜினிகாந்த் பூரண குணமடைந்ததால், அவர் சென்னை திரும்பலாம் என டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆனாலும் அவர் சென்னை திரும்பும் தேதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே ரஜினிகாந்த் சென்னை திரும்புவது பற்றி அவருடைய மருமகன் நடிகர் தனுஷிடம் கேட்டபோது, 'ரஜினிகாந்த் உடல்நிலை முழுவதுமாக தேறிவிட்டது. அவர் விரைவில் சென்னை திரும்புவார். அவரை அழைத்து வருவதற்காகத்தான் என் மனைவி ஐஸ்வர்யா நேற்று சிங்கப்பூர் புறப்பட்டு போய் இருக்கிறார்' என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











