சிக்கலில் அஜீத்தின் மங்காத்தா... வெளியிட தியேட்டர்கள் அச்சம்!

பெரும் எதிர்ப்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள படம் இந்த மங்காத்தா. காரணம் அஜீத்தின் 50வது படம் இது என்பது மட்டுமல்ல... முதல் முறையாக அஜீத்தும் அர்ஜூனும் இணைந்து நடித்துள்ள மல்டி ஸ்டாரர் படம் இது. த்ரிஷா, லட்சுமிராய் என பெரும் நடசத்திரப்பட்டாளமே உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். எப்படிப் பார்த்தாலும் இந்தப் படம் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்குமே நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருந்தாலும், இவர்கள் அனைவருமே படத்தை வாங்கத் தயங்குகிறார்கள்.
காரணம்?
படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன்!
இது ஒன்று போதாதா இன்றைய சூழலில் அத்தனை பேரையும் அச்சப்பட வைக்க!
இப்போது படம் முழுவதும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இதன் கேரள, ஆந்திர மற்றும் ஓவர்ஸீஸ் உரிமைகள் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் இன்னும் பிஸினஸ் ஆகவில்லை படம்.
தயாநிதி அழகிரியின் பேனரில் படம் வெளியானால் படத்தை வாங்குவது பாதுகாப்பில்லை என விநியோகஸ்தர்கள் கருதுகிறார்களாம். தியேட்டர்காரர்களின் மனநிலையும் அதுவே.
எனவே அம்மாவின் ஆசி பெற்ற அஜீத் தனது சொந்தப் பொறுப்பில் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. ஆனால் அஜீத்தோ, நான் அம்மாவைப் போய் பார்க்க மாட்டேன். அப்படிப் பார்த்தால் சுயநலத்துக்காக செய்த மாதிரி ஆகிவிடும். படத்தை தைரியமாக வெளியிடுங்கள், ஒன்றும் ஆகாது என்கிறாராம்.
சினிமாவே பெரிய ரிஸ்க்கான தொழில்.... இதில் இந்த மாதிரி பெரிய சோதனையை எல்லாம் செய்து பார்க்க முடியாது, என்று கூறிவிட்டு அஜீத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார்களாம் தியேட்டர்காரர்கள்.
அஜீத் என்ன செய்யப் போகிறார்?


Click it and Unblock the Notifications











