யார் குடும்பத்தில் பிரச்னைனாலும் தனுஷ் மீது குறியா?.. அவரது பக்குவம் வேறு யாருக்கும் இல்லையா?
சென்னை: இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். இப்போது அவர் குபேரா, இட்லி கடை படஙக்ளில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்திலும் நடித்துவருகிறார். இதுதவிர்த்து ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி கோலிவுட் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட்வரை சென்றிருக்கும் அவர் ஒரு விஷயத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார். அதாவது திரைத்துறையில் எந்த ஜோடி பிரிந்தாலும் அந்த விவகாரத்தில் தவறாமல் தனுஷ் பெயரை இழுத்துவிடுவதையே ஒருதரப்பினர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர் தனுஷ். கேட்டரிங் துறையில் கோலோச்ச வேண்டுமென்ற அவரது கனவை கொஞ்சம் தள்ளி வைக்க சொல்லி நடிகராகிவிட்டார் அவரது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா. அதன்படி துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்தில் அவரது தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யாதவர்கள் கொஞ்சம் பேர்தான் என சொல்லும் அளவுக்கு பலரும் அவரை உருவ கேலி செய்தார்கள். ஆனால் தனுஷோ அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது திறமையை வளர்த்துக்கொள்வதில் முழு கவனத்தையும் செலுத்தினார். அதன் பலனாக நல்ல நடிகர் என்ற இடத்துக்கு வந்தார் அவர்.
மகா நடிகன்: தனுஷுக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை காதல் கொண்டேன் திரைப்படம்தான் வெளிச்சம் போட்டு காட்டியது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த சில படங்கள் கிரிஞ்ச் தனமாகவும், முழுக்க கமர்ஷியல் தனமாகவும் இருந்தவைதான். இருப்பினும் அதிலும் தன்னுடைய முழு எஃபர்ட்டை போட்டிருந்தார். ஒருபக்கம் அவரது படங்கள் ட்ரோல் செய்யப்பட்டாலும் மறுபக்கம் புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமைக்கு தீனி போட்டுக்கொண்டார். அதேபோல் பாலுமகேந்திரா போன்ற லெஜெண்ட்ரி இயக்குநரே தனுஷை ஒரு சர்வதேச நடிகர் என்று புகழ்ந்திருக்கிறார். சிறு வயதிலேயே பாலுமகேந்திரா போன்றோரிடம் இப்படி ஒரு பாராட்டை பெறுவதெல்லாம் அபூர்வம்தான். அது தனுஷுக்கு நடந்தது.

வாக்கு பலித்தது: பாலுமகேந்திரா எந்த நினைப்பில் அந்த வார்த்தையை சொன்னாரோ அவர் சொன்னபடியே தனுஷ் இப்போது சர்வதேச நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் எளிதாக கூடு விட்டு கூடு பாயும் திறமையை அசால்ட்டாக வளர்த்துக்கொண்டார். பாரதிராஜா கூறியதுபோல், அசுரன் படத்தில் அனைவரது கால்களிலும் விழுந்துவிட்டு நடக்கும்போது அவரது கால்களிலும் உடல்மொழியிலும் கொண்டு வந்த தளர்ச்சி உண்மையில் ஒரு அசாத்தியம்தான். இப்படி ஏகப்பட்ட படங்கள் தனுஷின் நடிப்புக்கு சாட்சியாக நின்றுகொண்டிருக்கின்றன. ஆனால் அவரது நடிப்பை தாண்டி அவரை தனிப்பட்ட ரீதியில் தாக்குவது துரதிர்ஷ்டவசமான ஒன்று.
பிரச்னையான பெர்சனல் வாழ்க்கை: அவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டபோது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பொறாமைப்பட்டது. என்ன இது சினிமாவில் நடிக்க வந்த சில காலத்திலேயே சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகனா என்று வாயை பிளந்தார்கள். அதுமட்டுமின்றி ரஜினியின் நிழலில் இனி தனுஷ் வளர்ந்துவிடுவார் என்றெல்லாம் ஆரூடம் கூறினார்கள். ஆனால் தனுஷோ ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தை தாண்டி; தனுஷின் மாமனார் ரஜினிகாந்த் என்று அடையாளத்தை மாற்றி காட்டினார். சொல்லப்போனால் ஐஸ்வர்யாவுடனான திருமணத்துக்கு பிறகு தான் தேர்ந்தெடுத்த ஸ்க்ரிப்ட், தன்னுடைய நடிப்பு பயணம் என அத்தனையிலும் பார்த்து பார்த்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தார்.
இருப்பினும் யார் கண் பட்டதோ தெரியவில்லை தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கிறது. இந்த விவாகரத்தில் இரண்டு பேருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் இருக்கிறார்கள். அதிகமாக தனுஷ்தான் இந்த விஷயத்தில் டார்கெட் செய்யப்பட்டார். இதுவாவது பரவாயில்லை திரைத்துறையில் வேறு எந்த ஜோடி விவாகரத்து செய்தாலும் அதற்கு காரணம் தனுஷ்தான் என்ற நிலைப்பாட்டினை பலரும் எடுத்தார்கள். அது எந்தவிதத்திலும் அறம் இல்லை என்பதை அந்த நிலைப்பாட்டில் இருப்பவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பது துயரம்.
தொடர்ந்து கிசுகிசு: முதலில் ஸ்ருதி ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்; அடுத்ததாக ஏ.எல்.விஜய் - அமலா பால் விவாகரத்து, சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து போன்றவற்றில் டார்கெட் செய்யப்பட்டார். நடிகர் என்பதை தாண்டி ஒரு தனி மனிதனாக, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக தனுஷை கண்டிப்பாக பாதித்திருக்கும். ஆனாலும் அவர் அதையெல்லாம் பெரிதுப்படுத்தவில்லை. இப்போது உச்சக்கட்டமாக ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்திலும் அவரது பெயரை சம்பந்தமே இல்லாமல் கோர்த்துவிடுவதை வழக்கமாக்க ஆரம்பித்திருக்கிறார். பொதுவாக விவாகரத்து என்பது சம்பந்தப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய மன உளைச்சலை கொடுக்கக்கூடியது. அதில் ஒரு மூன்றாவது நபர் ஒருவரின் பெயரை இழுத்துவிட்டால் அவருக்கும் அந்த பெண்ணுக்கும் எவ்வளவு மன உளைச்சலை கொடுக்கும் என்பதை அந்தத் தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் பலரது கருத்து.
எல்லை மீறும் மீம்ஸ்: விவாகரத்து ஆனவர்கள் விஷயத்தில்தான் தனுஷை கோர்த்துவிடுகிறார்கள் என்றால்; ஒற்றுமையாக வாழும் ஜோடியையும் தனுஷ் பிரித்துவிடுவார் என்று எல்லை மீறி மீம்ஸையும் பறக்கவிடுகிறார்கள் சமூக வலைதளவாசிகள். தற்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்திருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான மீம்ஸ்கள் தனுஷ் மீது ஒரு தவறான பிம்பத்தை அவரது மகன்களிடம் உருவாக்கிவிடும் என்ற குறைந்தபட்ச பக்குவம்கூடவா இருக்காது என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. தனுஷும் ஐஸ்வர்யாவும்தான் பிரிந்திருக்கிறார்கள். இரண்டு மகன்களுக்கும் தகப்பன் தனுஷ்தானே.

ஏன் இந்த எண்ணம்?: தனுஷ் திரைத்துறையில் அத்துமீறல்களை செய்திருக்கிறார் என்று ஒருதரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று உங்களுக்கு எப்படி இது தெரியும் என்ற கேள்வியை முன்வைத்தால் அவர்களிடம் தெளிவான, ஆதாரப்பூர்வமான பதில் இருக்காது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சமாளித்து அங்கிருந்து நகர்ந்துவிடுவார்கள். சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷின் பெயரை சுசித்ரா இழுத்ததை ஆதாரமாக கொண்டு வருவார்கள். ஆனால் சுச்சி லீக்ஸ் நடந்து இத்தனை வருடங்களில் ஏன் சுசித்ரா அமைதியாக இருந்தார்; அந்த விஷயம் நடந்தபோதே தனுஷை சுசி சொல்லியிருக்கலாம். ஆனால் நீண்ட காலம் கழித்து தொடர்ந்து தனுஷ் மீது குற்றச்சாட்டுக்களை அவர் வைக்கும்போது இயல்பாகவே அதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகிக்கும் நிலைதானே வருகிறது.
தனுஷின் பக்குவம்: தனுஷை விமர்சிக்க அவரது நடிப்பு, அவர் இயக்கும் படங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அதைவிட்டுவிட்டு ஒரு ஜோடி பிரிந்தால் அவரை தொடர்ந்து டார்கெட் செய்வதெல்லாம் முறையல்ல என்பதுதான் பெரும்பாலானோரின் ஆணித்தரமான கருத்து. ஒருவர் மீது இன்னொருவர் ஒரு முத்திரையையோ, அடையாளத்தையோ குத்தினால் அதை வைத்தே அவரை அணுகுவது மனித மாண்பு இல்லை. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது; உண்மையில் அவர் இப்படித்தான் செய்திருப்பாரா என்று கொஞ்சமாவது யோசித்து அவர் மீது குற்றச்சாட்டுக்களையோ, விமர்சனத்தையோ வைக்க வேண்டும்.
தனுஷ் விவகாரத்தில் இது எதுவுமே நடப்பதில்லை. அவரை பொறுத்தவரை தன்னுடைய வேலை உண்டு என்று இருக்கிறார். தன் மீது இப்படி பல அவதூறான கருத்துக்களை வைத்தாலும் தனுஷ் அவர்களுக்கெல்லாம் எந்த எதிர்வினையையும் ஆற்றுவதில்லை. சுசித்ராவுக்கு கூட நாகரீகமாக, பக்குவமாக ராயன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பதிலளித்திருந்தார். அந்தப் பக்குவம் தனுஷுக்கு இருப்பதால்தான் அவர் முன்னேறிக்கொண்டே செல்கிறார்; அந்தப் பக்குவத்தை பலரும் வளர்த்துக்கொண்டால் அவர்களது வாழ்க்கையும் முன்னேறும் என்பதுதான் தனுஷ் ரசிகர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











