"இந்திய சினிமாவிற்குப் புதிய குரல்; தலை வணங்குகிறேன் மாதவன்" - ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு
சென்னை: நடிகர் ஆர்.மாதவன் இயக்கி நடித்திருக்கும் 'ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்' என்ற திரைப்படத்தைப் பார்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.
இத்திரைப்படத்தை பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கான்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டுரசித்திருக்கிறார்.
இந்நிலையில், இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மைக் கதை
கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் அவ்வழக்கில் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகர் மாதவன் இத்திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். இந்நிலையில், இத்திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.

தலை வணங்குகிறேன் மாதவன்
கான்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்தைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "இப்போது தான் ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் திரைப்படத்தைப் பார்த்தேன். இந்திய சினிமாவிற்குப் புதிய குரலைக் கொடுத்திருக்கும் நடிகர் மாதவனுக்காகத் தலை வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மாதவன் சிம்ரன் கூட்டணி
ராக்கெட்ரி திரைப்படத்தில் மாதவன் மீண்டும் சிம்ரனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்திரைப்படத்தில் மாதவன் - சிம்ரன் நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவல் தெரிவித்திருக்கின்றனர்.

ஜூலை ரிலீஸ்
கடந்த 2017-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திரைப்படம் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, திரைக்கதையாக உருவாக்கப்பட்டு சிறிது, சிறிதாக வளர்ந்து தற்போது ரிலீசுக்குத் தயாராக உள்ளது. முதலில் இவ்வாண்டு ஏப்ரல் 2022 ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது ஜூலை 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











