தமிழா தமிழா.. நாளை நம் நாளே.. ஆஸ்கர் நாயகன்.. விருதுகளின் மன்னன்.. இசைப்புயலுக்கு பிறந்த நாள்!
சென்னை: தனது துள்ளலான இசையின் மூலம் ரசிகர்கள் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஏஆர் ரஹ்மான் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் 1990களில் தனது இசைப்பயணத்தை தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்திற்குதான் முதலில் இசை அமைக்கும் வாய்ப்பை பெற்றார் ஏஆர் ரஹ்மான்.
முதல் படத்திலேயே மொத்த வித்தையையும் இறக்கி தேசிய விருதை தட்டிச்சென்றார் ஏஆர் ரஹ்மான். முதல் படத்தின் மூலம் அன்று இந்திய சினிமாவின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பினார் ஏஆர் ரஹ்மான்.

வாய்ப்புகள்
ரோஜா படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் ஒளிக்க ஒரே படத்திலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ரஹ்மானுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரிசை கட்டின.

தனித்துவமான இசை
இவர் இசைமைக்கும் படங்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ. பாடல்கள் அனைத்தும் பெரும் ஹிட்டடித்து விடும். தொடர்ந்து தனது தனித்துவமான இசையால் மக்களின் மனங்களை கவர்ந்து வருகிறார் ரஹ்மான்.

முன்னணி நடிகர்கள்
பம்பாய், காதலன், மிஸ்டர் ரோமியோ, திருடா திருடா, ஜென்டில்மேன், கருத்தம்மா, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மக்களின் மனங்களை கொள்ளை கொண்டன. ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார் ரஹ்மான்.

பெரிய பட்ஜெட்
கோலிவுட் மட்மின்றி பாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். பெரிய பட்ஜெட் படம் என்றாலே தயாரிப்பாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஓகே சொல்லும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தான்.

ஆஸ்கர் விருதுகள்
திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி ஏராளமான ஆல்பங்களையும் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். இந்திய சினிமாவுக்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கர் விருதை ஒன்றுக்கு இரண்டாக அள்ளிக்கொண்டு வந்த பெருமை அவரையே சேரும்.

கோல்டன் குளோப் விருது
தான் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியினர் என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார் ஏஆர் ரஹ்மான். அந்தப் படத்திற்காக ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதையும் பெற்றார்.

6 தேசிய விருதுகள்
இந்த விருதை ஆசிய கண்டத்திலேயே முதல் நபராக பெற்றவர் ஏஆர் ரஹ்மான்தான். ஒரு முறை பாஃப்டா விருதை பெற்றிருக்கிறார். இதுவரை 6 தேசிய விருதுகளையும் 6 முறை தமிழக அரசின் திரைப்பட விருதையும் குவித்திருக்கிறார்.

கலைமாமணி
15 பிலிம் ஃபேர் விருதுகளையும், 16 பிலிம் ஃபேர் சவுத் விருதுகளையும் அள்ளியிருக்கிறார் ஏஆர் ரஹ்மான். இசைத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கியிருக்கிறது.

பத்ம விருதுகள்
மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச அரசுகளும் ஏஆர் ரஹ்மானின் இசை தொண்டை பாராட்டி விருதுகளை வழங்கியிருக்கிறது. இரண்டு முறை கிராமி விருதுகளை குவித்துள்ள ஏஆர் ரஹ்மானின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு பத்ம ஸ்ரீ மற்றும் பத்விபூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்திருக்கிறது.

சாதனை
2018ஆம் ஆண்டு சிக்கிம் அரசின் சாதனைகளை உலக்குக்கு எடுத்துரைக்கும் தூதராக நியமிக்கப்பட்டார் ஏஆர் ரஹ்மான். இவரது இசையில் வெளியாகும் ஒவ்வொரு பாடலும் யூட்யூப், ட்ரென்டிங், வியூஸ், லைக்ஸ் என ஏதாவது ஒரு சாதனையை படைத்து வருகிறது.

சிங்கப்பெண்ணே
கடைசியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திற்கு இசையமைத்தார் எஆர் ரஹ்மான். அதில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கருத்து
படங்களுக்கு இசையமைப்பது, இசைப்பள்ளி நடத்துவது, வெளிநாடுகளில் கச்சேரி என என்னதான் பிஸியாக இருந்தாலும் சமீப காலமாய் அரசியலும் பேசுகிறார் ஏஆர் ரஹ்மான். அண்மைக்காலமாக அவர் பதிவிடும் ட்டிவிட்டுகள் ட்ரென்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











