twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கே.பிக்கு கோவையில் பாராட்டு-ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்

    By Sudha
    |

    K Balachander
    கோவை: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு கோவையில் பாராட்டு விழா நடந்தது.

    தாதா சாகேப் பால்கே விருது

    திரைத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டு தமிழின் மூத்த இயக்குனரான பாலச்சந்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் தமிழில் இவ்விருது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    நாடகத்துறையிலிருந்து சினிமாவிற்கு வந்த பாலச்சந்தர் 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். நாடகம், திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, சின்னத்திரை என சினிமாவின் சகல துறைகளிலும் சாதித்த பல்துறை வித்தகரான பாலச்சந்தர் சக கலைஞர்களால் 'இயக்குனர் இமயம்" என்று பாராட்டப்படுகிறார்.

    கோவையில் விழா

    தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாலச்சந்தருக்கு கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் 'நூறாண்டு காலம் வாழ்க" என்ற தலைப்பில் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விருது அறிவிக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் பாராட்டு விழா இதுவே ஆகும். இதற்கு முன்னர் சிவாஜி கணேசனுக்கு பால்கே விருது வழங்கப்பட்ட போதும் முதல் விழா கோவையில்தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில், பாரதீய வித்யா பவன் கிருஷ்ணராஜ் வானவராயர், கங்கா மருத்துவமனை கனவல்லி சண்முகநாதன், இசைக்கவி ரமணன் ஆகியோருடன் நடிகர் சிவக்குமார், இயக்குனர் விசு, பாடலாசிரியர் வைரமுத்து ஆகிய திரைத்துறையினரும் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர்.

    திரைப்படக்கல்லூரிக்கு பாலச்சந்தர் பெயர்

    விழாவிற்கு தலைமை தாங்கிய கிருஷ்ணராஜ் வானவராயர் 'சிவாஜி படம்; எம்.ஜி.ஆர் படம் என்று நடிகர்களின் பெயர்களினாலேயே அறியப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்கள் முதன் முதலாக இயக்குனரின் பெயரால் அறியப்பட்டது பாலச்சந்தருக்குப் பிறகுதான் என்றார்.

    எழுபதுகளின் துவக்கத்திலேயே சமூகப்புரட்சிக்கு வித்திட்ட துணிச்சலான படங்களை இயக்கிய சிந்தனையாளர் அவர். அவரது படங்கள் எல்லாக் காலத்திற்குமான பாடங்கள். எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி இருப்பது போல இன்னொரு திரைப்படக் கல்லூரியை ஏற்படுத்தி அதற்கு பாலச்சந்தரது பெயரை வைக்க ஆவண செய்யவேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    ஆறரை கோடியில் ஒருவர்

    'தாதா சாகேப் விருதினை இந்தியாவில் இதுவரை 41 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் 41 பேரில் ஒருவர். தென்னிந்தியாவில் இதுவரை 6 பேருக்கு கிடைத்துள்ளது. அவ்வகையில் அவர் அறுவரில் ஒருவர். தமிழகத்தில் இரண்டு பேருக்கு கிடைத்துள்ளது. அவ்வகையில் தமிழ்நாட்டில் இருவரில் அவர் ஒருவர். இயக்குனர் என்ற வகையில் தமிழில் அவருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. எனவே அவர் ஆறரை கோடி தமிழரில் முதல்வர்" என்று புகழாரம் சூட்டினார் கவிஞர் வைரமுத்து.

    புதுமை மாறாத 'புன்னகை"

    அடுத்து பேசிய சிவக்குமார், பாலச்சந்தர் இயக்கி பரவலான கவனம் பெறாமல் போன 'புன்னகை" என்ற படம் பல பத்தாண்டுகள் தாண்டியும் புதுமை மாறாமல் இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போவதையும், பாலச்சந்தரின் தலைசிறந்த திரைப்படங்கள் குறித்தும், ஒரு நடிகனாக அவரது இயக்கத்தில் பெற்ற வெற்றிகளைப் பற்றியும் நீண்ட உரையாற்றினார். கம்பராமாயணம், பாரதியார் கவிதை, பாலச்சந்தர் படங்களின் உரையாடல்கள் என பலவற்றை அவர் சரளமாகப் பேச ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

    தாயுமானவன் பாலச்சந்தர்

    நாடகாசிரியனாக பாலச்சந்தருக்கு அறிமுகமாகி, அவர் மூலம் வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது முதல் பாலச்சந்தருடனான தனது நெருக்கம் பற்றி விசு பேசினார். வாழ்வின் பல்வேறு தருணங்களில் அண்ணனாக, தந்தையாக, தாயுமானவனாக தனக்கு இருந்தவர் பாலச்சந்தரே என்றார் அவர்.

    ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்

    விருது பெற்ற பின் பாலச்சந்தருக்கு நிகழும் இந்த முதல் பாராட்டு விழாவில் ஆயிரக்கணக்கில் கோவை ரசிகர்கள் குவிந்தனர். சுமார் 1500 பேர் அமரக்கூடிய அரங்கத்தில் நின்று கொண்டும், அரங்கிற்கு வெளியிலுமாக சுமார் 3000 ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

    English summary
    Coimbatore Sree Krishna Sweets organized felicitation function for Director Balachandar who won Balke award. Lyricst Vairamuthu, Actor Sivakumar and others attended the function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X