16 வயதினிலேவில் கமலை ஏமாற்றிய பாரதிராஜா... கமல் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், கவுண்டமணி, நடிகை ஸ்ரீதேவி, இசைஞானி இளையராஜா என பல ஜாம்பவான்கள் பணிபுரிந்த படம் 16 வயதினிலே.
வெறும் படமாக மட்டுமல்லாமல் சினிமாவில் இயக்குநர்கள் ஆக வேண்டும், நடிகர்களாக வேண்டும் என்ற முனைப்புடன் வருபவர்களுக்கு அது பாடமாகவும் அமைந்துள்ளது.
அதில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.

மயில் டூ 16 வயதினிலே
வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக கமலஹாசன் பல படங்களில் கிட்டார் வைத்துக்கொண்டு ஸ்டைலிஷ் லுக்கில் பெண்களுடன் ரொமான்டிக் பாடல்களில் ஆடிக்கொண்டிருந்த போது, கோமணம் கட்டி நடிக்க வைத்தார் பாரதிராஜா. இந்த படத்திற்காக கமல்ஹாசன் 30000 சம்பளம் கேட்டு 27000 கொடுத்து பாரதிராஜா அவரை நடிக்க வைத்தாராம். ஆரம்பத்தில் மயில் என்கிற தலைப்பில் தான் இந்தக் கதையை எழுதியுள்ளார் பாரதிராஜா. பாரதிராஜா மற்றும் கமலஹாசன் துணை இயக்குனர்களாக இருந்த காலகட்டத்திலேயே கமல்ஹாசனிடம் இந்த கதையை கூறியுள்ளாராம். பின் மீண்டும் இந்தக் கதையை சொல்ல சென்றபோது தனக்கு ஏற்கனவே தெரிந்த கதை என்பதால் இம்முறை கதையை கேட்காமலேயே நடிக்க சம்மதித்தாராம் கமல்.

தயாரிப்பில் நெருக்கடி
ராஜ் கண்ணு என்ற தயாரிப்பாளர் ஐந்து லட்சத்தில் இந்த படத்தை எடுக்க முன் வந்தார். ஒரு நாள் வேறொரு சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நபர் ஸ்டைலாக பைக் ஓட்டி வந்து நிறுத்தியதை பாரதிராஜா பார்த்திருக்கிறார். உடன் இருந்தவர் இவர் தான் பாலச்சந்தர் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் என்று சொல்ல, ரஜினிதான் பரட்டைக்கு சரியாக இருப்பார் என்று அங்கேயே வைத்து நடிக்க சம்மதிக்க வைத்தாராம். ரஜினி கேட்டது 5000 சம்பளம். ஆனால் இவர் தருவதாக சொன்னது 3000. ஆனால் இதுவரை கொடுத்தது வெறும் 2500 மட்டும்தான் என்று பாரதிராஜா சமீபத்தில் கூறியுள்ளார்.

கமலை ஏமாற்றிய பாரதிராஜா
ஒருமுறை ஷூட்டிங்கின் போது படச்சுருள் வருவதற்கு தாமதமாகிவிட்டதாம். ரயில் நிலையத்திலிருந்து அந்த கிராமத்திற்கு கொண்டு வர ஒரு மணி நேரம் இருந்த சூழ்நிலையில், நடிகர்கள் அனைவரும் சூட்டிங் ஸ்பாட்டில் தயாராக இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் வெறும் கேமராவை ஆன் செய்து ஷார்ட்ஸ் எடுக்கலாம் என்று பாரதிராஜா யோசனை கொடுக்கவே வேறு வழியின்றி ஒளிப்பதிவாளரும் அதையே செய்துள்ளார்.

கமல் செய்த அட்வைஸ்
ஷாட்டில் நடிக்க ஆரம்பித்த கமலஹாசன் திடீரென்று நடிப்பை நிறுத்திவிட்டு இவர்கள் அருகே வந்தாராம். மாட்டிக் கொண்டோமோ என்ற அச்சத்தில் இவர்கள் இருக்க, ஏன் கேமராவிலிருந்து சத்தம் வருகிறது என்று பாரதிராஜாவின் தோள் மீது கை போட்டு தனியாக அழைத்துச் சென்று, இப்படி நீங்கள் படம் எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் என் சம்பளத்தை கூட நான் கொடுக்கிறேன் இப்படி செய்யாதீர்கள் என்று தனக்கு அட்வைஸ் செய்ததாக பாரதிராஜா ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











