ரஜினி, கமல் போல இளையராஜாவும் இந்த தேசத்தில் விலைமதிப்பில்லா பொக்கிஷம்- பாரதிராஜா
சென்னை: ரஜினி, கமல் மாதிரி இசைஞானி இளையராஜாவும் இந்த தேசத்தின் விலை மதிப்பில்லா பொக்கிஷம் என்றார் இயக்குநர் பாரதிராஜா.
சென்னை கமலா திரையரங்கில் நேற்று நடந்த 16 வயதினிலே ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசுகையில், "சில நேரங்களில் மனிதன் உணர்ச்சிவசப்படும்போது வார்த்தைகள் வசப்படாது. 36 வருடங்களை நான் திரும்பிப் பார்க்கிறேன்.

கண்ணாடியில் என் முகத்தை பார்க்கும் போது காலம் என் முகத்தில் வரைந்த கோடுகள் தெரியும். ஆனால் காலம் மாறினாலும் ரஜினி, கமலின் கலை உணர்ச்சிகள் இன்றும் மாறவில்லை. இவர்கள் இந்த நாட்டின் பொக்கிஷங்கள்.
நான் எப்போதும் முதலாளி என்றழைக்கும் எஸ்.ஏ.ராஜ்கண்ணு இன்றும் நல்ல நிலையில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
இசைஞானி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் மாச்சர்யங்கள் இருக்கு. ஸ்ரீதேவி வந்திருக்கலாம்.
புகழின் உச்சியில் இருக்கும் ரஜினி, கமலை சூப்பர் ஸ்டார், உலகநாயகன் என சொல்லத்தோன்றும். ஆனால் எனக்கு கமல், ரஜினி என்று சொல்ல உரிமை இருப்பதால் இதுவரை சொன்னதில்லை. அதுதான் இயல்பாகவும் இருக்கிறது. அவர்கள் ஏதும் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
கமல் பிறக்கும்போது அழுதபோதே கலையுடன் தான் அழுதிருப்பாய். இந்த உலகநாயகனோடு எந்த வசதியுமில்லாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினேன்.
நானும் ரஜினியும் வராண்டாவில் படுத்து உறங்குவோம். இன்றைய நடிகர்கள் யாரும் அப்படிப்பட்ட வசதியுடன் நடிக்கமாட்டார்கள். பரட்டைக்கு ஆள் தேடியபோது மோட்டார் பைக்கில் படபூஜைக்கு வந்த ரஜினியைப் பார்த்தேன். அதன்பிறகு தேடிப்பிடித்து ரஜினியிடம் கதை சொல்லி, இது அவார்டுக்கான படம் என்று பொய் சொன்னேன். கமலிடம் கோமணம் கட்டி நடிக்கவேண்டும் என கேட்க கூச்சமாக இருந்தது. அதைக் கண்ட கமல் என்னவென்று விசாரித்து விறுவிறுவென துணியை அவிழ்த்து கோமனத்துடன் நின்றார்.
என்னை ஒரு விதையாக தயாரிப்பாளர் நட்டார். எனக்கு உரமாக இருந்தவர்கள் ரஜினி, கமல், ஸ்ரீதேவி. இன்று ரசிகர்களால் விருட்சமாக நிற்கிறேன்.
இசைஞானி இல்லாவிட்டால் பாதிப் பெருமை குறையும்
இதற்கு ரத்தமும் நாளமுமாக இருந்த இசைஞானி இங்கு இல்லை. அவன் இல்லையென்றால் இந்த படத்தின் பெருமை பாதி குறையும். பாமரத்தனமாக என்னுடன் பயணப்பட்டு, இன்று உலகம் வியந்து பார்க்கும் இசைஞானியாக நிற்கிறான். ரஜினி, கமல் போல இசைஞானியும் இந்த நாட்டின் சொத்து. மேடையில் இல்லையென்றாலும் பாராட்டவேண்டியவன் இசைஞானி.
இவ்வளவு வளர்ச்சிக்குப் பிறகும் என் முதலாளியை கௌரவிக்க வந்ததற்கு ரஜினி, கமலுக்கு நன்றி.
இந்த நேரத்தில் 'இது எப்படி இருக்கு' என்ற வசனத்தை எழுதிய நண்பன் கலைமணியை நினைத்துப் பார்க்கிறேன். 'ஆத்தா ஆடு வளத்தா... கோழி வளத்தா... நாய் வளக்கல... இந்த சப்பாணியத்தான வளத்தா..." என்றெல்லாம் அற்புதமான வசனங்களை எழுதிய கலைமணி இப்போது இல்லை... என் நண்பர்கள் செல்வராஜ், கலைமணி, எனது ரைட்டர்ஸ் பாக்யராஜ், ரத்னகுமார் இவர்களையெல்லாம் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் இல்லையென்றால் நான் இல்லை," என்று கண்ணீருடன் பேச்சை முடித்தார்.


Click it and Unblock the Notifications











