காமெடி நடிகரின் கண்ணீர் கதை: சாகுற வரைக்கும் உதவி செய்யணும்.. மறைந்தும் வாழும் மயில்சாமி!
சென்னை: நகைச்சுவை நடிகர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகத் திறமை கொண்டவர் மயில்சாமி. இவர் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி, அதாவது காந்தி ஜெயந்தி அன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தார். எம்ஜிஆரின் தீவிர பக்தரான இவர், மற்றவர்களுக்கு உதவி செய்து, அவர் மகிழ்ந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். நிறைய நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்பது என் ஆசை இல்லை, ஆனால், இருக்கு வரை உதவ வேண்டும் என்பது இவரின் தாரக மந்திரமாக இருந்தது.
நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட மயில்சாமி, ஒரு மிமிக்ரி கலைஞராவார். பல நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து அசத்தி உள்ளார். தமிழ் திரை உலகில் முதன்முறையாக மிமிக்ரி கேசட்டுகளை வெளியிட்டவர் மயில்சாமி தான் என சொல்லப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தாவணி கனவுகள் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் கூட்டத்தில் ஒருவராக மயில்சாமி நடித்திருந்தார். 1985 ஆம் ஆண்டு கன்னி ராசி படத்தில் டெலிவரிபாயாக நடித்திருந்தார். பிறகு 1989 ஆம் ஆண்டு கமலஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலஹாசனின் நண்பராக நடித்திருந்தார். அதே ஆண்டு கமலஹாசனின் வெற்றி விழா படத்தில் குஷ்புவின் சகோதரராக மயில்சாமி நடித்திருந்தார். ரஜினிகாந்தின் பணக்காரன் படத்தில் தொழிற்சாலை ஊழியராக நடித்திருந்தார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலின் நண்பராக நடித்திருப்பார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் அவர்களின் நண்பராக சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடிகர் மயில்சாமி: 2000வது ஆண்டுக்கு பிறகு காமெடி ஜாம்பவான்களான விவேக் மற்றும் வடிவேலுவுடன் கூட்டணி சேர்ந்து நடித்தார். பாளையத்தம்மன் படத்தில் விவேக் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் போலி சாமியாராக இவர் நடித்த காமெடியும், சூர்யாவின் உன்னை நினைத்து படத்தில் தங்க பஸ்பம் சாப்பிட்டு நிறம் மாறும் காமெடியும் மிகவும் பிரபலம். பாக்யராஜ் படம் மூலமாக அறிமுகமான மயில்சாமி தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், கௌதம் கார்த்திக், சந்தானம், லெஜெண்ட் சரவணன் என அனைத்து கதாநாயகர்களுடனும் முக்கிய கதாபாத்திரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனதில் நிறைந்துள்ளார். லெஜெண்ட் படத்தில் பிறகு கடைசியாக உடன்பால் என்ற திரைப்படத்தில் நடித்தார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல், மர்மதேசம் சீரியலிலும், காமெடி டைம், லொள்ளுப்பா என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மனதின் ஆசை: கொரோனா பேரிடர் காலத்தில் விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மயில்சாமி. கடந்த சட்ட சபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயட்சையாக போட்டியிட்டார். இவருக்கு அன்பு, யுவன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே திரைத்துறையில் உள்ளனர். நடிகர் மயில்சாமி தனது 57வது வயதில், 2023ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். எம்ஜிஆரின் தீவிர பக்தரான மயில்சாமி, அவரை போல பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்து, தான் உயிரோடு இருக்கும் வரை இல்லாதவர்களுக்கு வாரி வாரி கொடுத்து உதவி செய்தார். இதுகுறித்து ஒருமுறை மேடையில் பேசிய மயில்சாமி, என் பெற்றோருக்கு நல்ல மகன், என் மனைவிக்கு நல்ல கணவன், என் பிள்ளைகளுக்கு நல்ல அப்பா என்பதில் பெருமை இல்லை. எம்ஜிஆரின் ரசிகன், பக்தர் என்பதில் தான் எனக்கு பெருமை. நிறைய நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்பது என் ஆசை இல்லை. ஆனால், இருக்கும் வரை பிறகு உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது என்றார். தன் வாழ்நாளில் கடைசி நொடி வரை பிறகு உதவி செய்து மறைந்தார் மயில்சாமி. அவர் உடல் தான் மறைந்ததே தவிர, அவர் செய்த உதவியால் மக்கள் மனதில் வாழ்த்து கொண்டு இருக்கிறார் மயில்சாமி,


Click it and Unblock the Notifications











