காமெடி நடிகரின் கண்ணீர் கதை: பசி பட்டினியில் துவண்டு போகாத செந்தில்.. 14வருட வனவாசத்தில் ஜெயித்த கதை
சென்னை: நகைச்சுவை நடிகர் செந்திலை ஒரு காமெடி நடிகராக அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், அவர் நகைச்சுவை நடிகராக வேண்டும் என்பதற்காக பட்ட அவமானம், அழுகை பல பேருக்கு தெரியாது. 1951ம் ஆண்டு ராமநாதபுரத்தில் ராமமூர்த்தி மற்றும் திருக்கம்மல் தம்பதியினருக்கு 3வது மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் முனுசாமி. சினிமாவிற்கு வந்த பிறகு தனது பெயரை செந்தில் என மாற்றிக்கொண்டார். செந்தில் சுட்டித்தனமாக இருந்ததால், இவரது தந்தைக்கு இவரை பிடிக்காதாம், இதனால், அவர் பலமுறை இவரை உதாசினப்படுத்தி, திட்டி உள்ளார்.
இதனால், மனம் உடைந்து போன செந்தில், தனது 12வது வயதில் வீட்டை விட்டு மன வேதனையுடன் வெளியே வந்துள்ளார். பின் எண்ணெய் ஆட்டும் வேலையிலும், மதுபானக்கடையில் வெயிட்டராக வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் தங்கி, சினிமா வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். அப்போது நாடக கம்பேனி ஒன்றில் சேர்ந்து வேலை பார்த்தார். இதுவே செந்தில் சினிமாவில் நுழைய அடித்தளமாக அமைந்தது. 1979ம் ஆண்டு 'ஒரு கோவில் இரு தீபம்' திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன் பின் பல படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தாலும், அவரது பெயர் திரையில் வந்தது, மலையாளத் திரைப்படமான 'இத்திக்கார பக்கி' படம் தான். அதன் பிறகு, தமிழில் செந்தில் நடித்த மலையூர் மம்பட்டியன் படம், அவருக்கு மாபெரும் திருப்பத்தைத் தந்தது.

நடிகர் செந்தில்: ஒரு வருடத்தில் ஏராளமான படங்களில் நடிக்க ஆரம்பித்த செந்திலுக்கு, சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணி ஒரு பாட்னராக கிடைத்தார். இருவரும் இணைந்து 'வைதேகி காத்திருந்தால்' படத்தில் சேர்ந்து நடித்தனர். பின்னர் எங்கு திரும்பினாலும், கவுண்டமணி செந்தில் காமெடி தான் பேசப்பட்டது, இருவரும் சேர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களின் இருவரின் கூட்டணியில் மறக்கவே முடியாத நகைக்சுவை காட்சி கரகாட்டக்காரன் படத்தில் வரும் 'வாழைப்பழ காமெடி' மற்றொரு 'காரு வெச்சி இருந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வெச்சி இருக்கா காமெடி' தான். இந்த சொப்பன சுந்தரி நகைச்சுவை இந்த காலத்து இளைஞர்களை கவர்ந்துள்ளது. 1979ல் ஆரம்பித்த பயணம் இன்றும் சாதனையாக தொடர்ந்து இருக்கிறது.
அவர் பட்ட அவமானம்: நடிகர் செந்தில் வெற்றிப் பாதையில் பயணித்தாலும், இவர் கடந்து வந்த அவமானங்களும், அழுகையும் ஏராளம் என இயக்குநர் பாக்யராஜ் பேட்டி ஒன்றில், செந்தில் பற்றி கூறியிருந்தார். செந்தில் படவாய்ப்பை தேடி தேனாம்பேட்டையில் மென்ஷனில் தங்கிருந்த போது, அங்கு பாக்யராஜும் தங்கி உள்ளார். அப்போது, அங்கு இருந்த சக நடிகர்கள் செந்திலை ரொம்ப கேவலமாக நடத்துவார்களாம், டேய் சொட்ட இங்க வாடா என்று கூப்பிட்டு.. போய், டீ வாங்கிட்டு வாடான்னு சொல்லுவாங்களாம், இதைப் பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும். எனக்கு படம் எடுக்க வாய்ப்பு வரும் போது இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அப்படித்தான், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு படங்களில் செந்திலை நடிக்க வைத்தேன் என பாக்யராஜ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
சாதித்த செந்தில்: 12 வயதில் வீட்டை விட்டு ஓடிவந்த செந்தில், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவது தெரிந்து பல முறை பெற்றோர் ஊருக்கு அழைத்தும், பிடிவாதமாக இருந்த செந்தில், சினிமாவில் ஜெயித்த பிறகு, ராமர் வனவாசம் சென்றது போல, 14 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு சென்று பெற்றோரை சந்தித்தார். நடிகர் செந்தில் 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். தனது குடும்பத்தில் யாரும் பெரிய அளவில் படிக்காததால், தனது மகனை டாக்டருக்கு படிக்கவைத்துள்ளார். முதல் முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலுடைய மகன் தான். ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு, மதுபானக்கடையில் வெயிட்டாக வேலை பார்த்த செந்தில், தனது கடுமையான உழைப்பால் உயர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











