வழக்கு விட்டும் தொல்லை விடலை!
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, தசாவதாரம் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதில் தோல்வியுற்ற உதவி இயக்குநர் செந்தில்குமார், தசாவதாரத்தின் உண்மைக் கதை என்ற பெயரில் ஒரு அனிமேஷன் படத்தை எடுத்து அதை சிடி வடிவிலும் புத்தக வடிவிலும் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
| Click here for more images |
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பிரமாண்டத் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில், ஆசின் உள்ளிட்ட நாயகிகளின் கலக்கல் நடிப்பில் உருவாகி வரும் படம் தசாவதாரம்.
இந்த நிலையில் செந்தில்குமார் என்ற உதவி இயக்குநர், தசாவதாரம் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி முதலில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தள்ளுபடியாகி விட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். பின்னர் அப்பீல் செய்தார். அதையும் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச் தள்ளுபடி செய்து, கமலுக்கு சொந்தமானதுதான் தசாவதாரம் படத்தின் என்று தீர்ப்பளித்தது.
இதனால் நிம்மதி அடைந்த கமல் தரப்பு தற்போது படத்தை முடிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால் செந்தில்குமார் பிரச்சினையை விடுவதாகத் தெரியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கமலுக்கு நெருக்கமானவர்கள் தன்னை ஆள் வைத்து அடித்தாக புதிய புகாரைக் கூறியுள்ளார் செந்தில்குமார். இதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசனுக்கு நெருக்கமான சிலர் என்னை ஆள் வைத்து அடித்தனர். இதுகுறித்து முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கூறினேனன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை ஏற்றுள்ள நீதிமன்றம் விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தசாவதாரம் படத்தின் கதை உரிமை தொடர்பாக விரைவில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளேன் என்றார்.
இந்த நிலையில் தசாவதாரம் படத்தின் ஒரிஜினல் கதை என்ற பெயரில் புதிய அனிமேஷன் படம் ஒன்றை உருவாக்கியுள்ளாராம். அப்படத்துக்கு 'Cloning- The original version of Dasavatharam' என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
இதுதான் தனது ஒரிஜினல் கதை, இதைத்தான் தசாவதாரம் படம் என்ற பெயரில் திருடி விட்டனர் என்று கூறும் செந்தில்குமார், இதை புத்தக வடிவிலும் அச்சிட்டுள்ளார்.
தசாவதாரம் படம் ரிலீஸாவதற்கு முன்பாக இந்த சிடியையும், புத்தகத்தையும் அவர் வெளியிடப் போகிறாராம்.
ஆனால் இதுகுறித்து சற்றும் கவலைப்படாத தசாவதாரம் யூனிட், படத்தை பொங்கலுக்குக் கொண்டு வர படு வேகமாக ஆயத்தமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications