5 நாயகர்கள் நடிக்க.. வெங்கட் பிரபு இயக்க... தயாநிதியின் மெகா திட்டம்!
தமிழில் சுள்ளானும் சுண்டு விரலும் கூட சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று பிகு பண்ணுகிறார்கள். ஆனால் மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நான்கைந்து முன்னணி நடிகர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்கிறார்கள்.
இப்போது அந்த நிலையை தமிழ்ப் பட உலகிலும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாநிதி அழகிரி.
முதன்முதலாக தமிழில், 5 ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாநிதி. கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் வெங்கட் பிரபு.
இப்போது, புதுமுகங்களை வைத்து தூங்கா நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார் தயாநிதி. அடுத்து, லிங்குசாமி இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.
இதையடுத்து, வெங்கட்பிரபு இயக்கும் இந்த மெகா பட்ஜெட் படம் உருவாகிறது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளார் தயாநிதி.
5 ஹீரோக்களிடமும் பேச்சு நடத்தி வரும் தயாநிதி, 'எந்த ஹீரோவும் எனக்கு பிரச்சினையில்லை. சுமூகமாக இந்தப் பட வேலைகள் நடக்கும்' என்கிறார்.


Click it and Unblock the Notifications











