பாலாவின் கதாநாயகர்கள்…. ஒரு பார்வை
ஓரளவு சுமாரான கதாநாயகர்களையும், கதாநாயகிகளையும் அழகாக காட்டுவது இயக்குநர்கள், கேமராமேன்களின் வேலை. ஆனால் அழகானவர்களைக்கூட எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு தலை முடியை குதறி, கறுப்பு பெயிண்ட் அடித்து திரையில் காட்டுவது பாலா ஸ்டைல்.
இவரின் கைவண்ணத்தில் சிக்கியவர்கள் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் சமீபத்திய அதர்வா. இதில் எல்லோருமே தலை முடியை ஒரு ரேஞ்சுக்கு மேல் இழந்தவர்கள்தான்.
ஆனாலும் அதையும் ரசித்து படத்தை வெற்றி பெற வைத்துவிட்டனர் நம் ரசிக மகாஜனங்கள். எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க பாலா? என்று கேட்பவர்களுக்காகவே இந்த கட்டுரை.

சேதுவில் தொடங்கிய பயணம்
பாலாவின் முதல் படமான ‘சேது'வில் அழகான விக்ரம் பாதி படம் வரை துறு துறு விக்ரமாக வருவார். இடைவேளைக்குப் பிறகு பாவம் மனநலம் பாதித்து மொட்டை அடித்து உடலை இளைக்க வைத்து ஒரு அழுக்குத் துணியை கொடுத்து கடைசியில் முடித்திருப்பார்.

நந்தாவில் சூர்யா
அடுத்த படமான ‘நந்தா'வில் சூர்யாவின் கெட் அப் மாறியிருக்கும். அதுவரை சாக்லேட் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யாவின் கண்களில் ஒரு கோபம் இருக்கும். முடியை ஒட்ட வெட்டி காதலை கண்களில் காட்டத் தெரியாத சூர்யாவை திரையில் காட்டியிருப்பார்.

பிதாமகனில் கலர் முடி
‘பிதாமகன்' படத்தில் வெட்டியானாக நடித்த விக்ரமின் ஹேர்ஸ்டைல் இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் யாரும் யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். மற்றொரு ஹீரோ சூர்யா எப்படியோ தப்பிவிட்டார்.

சடை முடி வளர்த்த ஆர்யா
‘நான் கடவுள்' படத்திற்காக கஞ்சா சாமியாக காட்டிய ஆர்யாவிற்கு கழுத்து வரை நீண்ட முடி வளர்த்துவிட்டிருப்பார். இந்த படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமான அஜீத் உடல் இளைத்து முடி வளர்த்தது தனி கதை.

அவனும் இவனும்
பாலாவினால் காமெடி படம் என்று கூறப்பட்ட ‘அவன் இவன்' படத்தில் விஷால் மாறுகண் கொண்ட அரவாணியாக நடித்திருப்பார். ஆனால் ஆர்யாவின் தலையில் கைவைத்த பாலா சதுரவைட்டை ரேஞ்சுக்கு குதறியிருப்பார். இதுபோன்ற ஹீரோக்களையும் கதாநாயகிகள் உருகி உருகி காதலிப்பார்கள் என்பது பாலா படத்தில் மட்டுமே சாத்தியம்.

பரதேசியில் தப்பாத அதர்வா
பாலாவின் சமீபத்திய படமான பரதேசியில் ஹீரோ அதர்வாவின் ஹேர் ஸ்டைல், உடை என எல்லாமே தனித்துவமாக இருக்கும். இதில் சாக்குத் துணியில் தைத்த உடைக்கு தேசிய விருது கிடைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சசிகுமாரின் கோரிக்கை
பாலாவின் அடுத்த பட ஹீரோக்கள் சசிகுமார், விக்ரம் பிரபு என்று தகவல் அடிபடுகிறது. இதில் ஒப்பந்தம் செய்யும் போதே தலையில் கை வைத்து விடாதீர்கள் என்று பாலாவிடம் சசிகுமார் சொல்லி விட்டாராம். அதற்கு ஓகே சொன்ன பாலா விக்ரம் பிரபு தலையில் எப்படி கோலம் போடுவது என்று யோசிக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











