ஒரு பழங்கதை.. அஜித்துக்கு எஸ்ஜே.சூர்யா சொன்ன லவ் ஸ்டோரி..'வாலி'க்கு முன் அதுதான் நடந்திருக்கணும்!
சென்னை: 'வாலி' படத்துக்கு முன், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, அஜித்துக்கு சொன்ன காதல் கதையை இன்றுவரை படமாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
Recommended Video
அஜித்துக்கு இன்று 49 வது பிறந்த நாள். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடுகிறார்கள், அவரது ரசிகர்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனில் நாடு இருப்பதால், கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் கூறியிருந்தார்கள், அஜித் தரப்பில்.

டிரெண்டாகி வருகிறது
ஆனால், அதை கேட்கவில்லை ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாகக் கொண்டாடி வருகிறார்கள். நேற்றில் இருந்தே டிரெண்டாகி வருகிறது, அஜித் பிறந்தநாள் தொடர்பான இரண்டு மூன்று ஹேஷ்டேக்குகள். ரசிகர்கள் அஜித்தை புகழ்ந்து அந்த ஹேஷ்டேக்குகளில் பதிவு செய்து வருகின்றனர். பழைய, புதிய புகைப்படங்களையும் அதில் பதிவிட்டு வருகின்றனர்.

அப்படியொரு நெருக்கம்
இந்நிலையில், ஒரு 'பழங்கதை' ரசிகர்களுக்காக!. அப்போது தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் அதிக நெருக்கம். நல்ல நண்பர்கள். அவர் தயாரிப்பில் அதிகமான படங்களில் நடித்து வந்தார், அஜித். ஒரு காதல் கதையை உருவாக்கி, அதை நடிகர் அஜித்துக்குச் சொல்ல முயன்றார் எஸ்.ஜே.சூர்யா.

காதல் கதை
கதையை கேட்டார், தயாரிப்பாளர் சக்கரவர்த்தி. அது வித்தியாசமான காதல் கதை. 'இந்தக் கதை அருமையாக இருக்கிறது. இதைப் படமாகப் பண்ணினால், அஜித்துக்கு வழக்கமான இன்னொரு காதல் கதையாகத்தான் இருக்கும். அதை அப்படியே வைத்துவிட்டு, அஜித் இரண்டு கேரக்டரில் நடிப்பது போல ஒரு கதை பண்ணுங்களேன்' என்றார், எஸ்.ஜே.சூர்யாவிடம்.

எப்படி வில்லனாக்குவது?
அதில் ஒரு கேரக்டர் வில்லனாக இருக்கவேண்டும் என்றும் சொன்னார். 'காதல் கதைகளில் நடித்து வருகிறார் அஜித், அவரைப் போய் எப்படி வில்லனாக்குவது?' என்று தயங்கினார் எஸ்.ஜே.சூர்யா. 'எம்.ஜி.ஆரே அப்படியொரு கேரக்டரில் நடித்திருக்கிறார். படம் நீரும் நெருப்பும். அந்த ஸ்டைலில் ஒரு கதை பண்ணுங்களேன்' என்று சொல்ல, அடுத்த ஒரு வாரத்தில் 'வாலி'யோடு வந்தார் எஸ்.ஜே.சூர்யா.

மிரண்டு போனார்கள்
கதையை கேட்டு, தயாரிப்பாளர் சக்கரவர்த்தியும் அஜித்தும் மிரண்டு போனார்கள். இந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று, ஆரம்பித்தார்கள். நினைத்த மாதிரி ஆரம்பத்தில் டேக் ஆஃப் ஆகவில்லை படம். மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு மவுத் டாக்கில் படம் பேசப்பட, சூப்பர் டூப்பர் ஹிட்டானது. எஸ்.ஜே.சூர்யா அடுத்தக் கட்டங்களுக்குச் சென்றார். அஜித்தின் டாப் 10 படங்களில் 'வாலி'க்கும் ஓர் இடம் இருக்கிறது. ஆனால், இன்று வரை அஜித்துக்கு சொன்ன அந்த காதல் கதையை சினிமாவாக்கவில்லையாம் எஸ்.ஜே.சூர்யா!


Click it and Unblock the Notifications











