Exclusive - காமராஜர் செயின் ஸ்மோக்கரா?.. அஜித் பட இயக்குநர் இப்படி சொல்றாரே?.. பிரத்யேக பேட்டி
சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பற்றி திமுக எம்.பி சிவா சில நாட்களுக்கு முன்பு பேசிய விஷயம்தான் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்குகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. அவர் அப்படி பேசியதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் வாள் சுழற்ற; திமுகவினரும் தங்களது பதிலடியை கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு இயக்குநர் சரண் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் காமராஜர் குறித்து பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காமராஜர் அனைவராலும் மதிக்கப்படுபவர். கல்வி கண் திறந்தவர், கர்ம வீரர், ஏழைகளின் பங்காளி என புகழப்படும் அவரை இன்றுவரை பின்தொடர்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். முக்கியமாக அவருக்காகவே இன்னமும் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் தலைகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த மதிப்பு?: தமிழ்நாட்டில் யார் அரசியல் கட்சி தொடங்கினாலும், அரசியலில் இருந்தாலும் காமராஜரையே முன்னுதாரணமாக கூறுவார்கள். அந்த அளவுக்கு அவர் எளிமையாகவும், நேர்மையாகவும் இருந்தார் என்பது தமிழ்நாட்டில் பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் சில நாட்களுக்கு முன்பு திமுகவை சேர்ந்த சிவா ஒரு நிகழ்ச்சியில் காமராஜர் மற்றும் கருணாநிதி இடையேயான பழக்கத்தை பற்றி கூறினார்.

என்ன பேசினார்?: அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், காமராஜருக்கு ஒருகட்டத்தில் ஏசி இல்லாமல் தூங்க முடியாத நிலை உருவானது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சூழலும் வந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம், சிலர் வந்து காமராஜரின் நிலையை எடுத்து சொன்னார்கள். உடனே தமிழ்நாட்டில் இருக்கும் விருந்தினர் மாளிகைகள் அனைத்திலும் குளிர் சாதன் வசதியை செய்துகொடுத்தார் கலைஞர். மேலும் காமராஜர் இறக்கும் தருவாயில் கலைஞரின் கைகளை பிடித்துக்கொண்டு நீங்கள்தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமென சொன்னதாக கூறினார்.
எழுந்த சர்ச்சை: சிவாவின் இந்தப் பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடமும், காமராஜர் தொண்டர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் சிவாவுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்துவருகிறார்கள். மேலும் வேண்டுமென்றே இப்படி பொய் தகவல்களை கூறுகிறார் எனவும் பேச்சுக்கள் எழுந்தன. அதேசமயம் சிவா கூறிய சம்பவத்தை கருணாநிதியும் தனது முகநூல் பக்கத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர் பதிவு செய்த ஆதாரத்தையும், காமராஜர் வீட்டில் ஏசி இருந்ததற்கான ஆதாரத்தையும் திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
சரண் பேட்டி: இந்தப் பிரச்னை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே செல்லும் சூழலில் அண்மையில் ஃபில்மீபீட் தமிழுக்கு இயக்குநர் சரண் கொடுத்த பேட்டியில் ஒரு சம்பவத்தை பகிர்ந்திருந்தர். அவர் அந்தப் பேட்டியில், "கே.பாலசந்தர் இயக்கிய எதிர்நீச்சல் நாடகத்தில் ராமன் என்பவர் நாயர் என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். அதனால் அவர் நாயர் ராமன் என்று அழைக்கப்படுவார். அவர் கே.பியிடம் வசனம் சொல்லிக்கொடுக்கும் வேலையில் இருந்தார்.
செயின் ஸ்மோக்கர்: அவரும் நானும் நல்ல பழக்கம். அவர் ஒருமுறை என்னிடம் காமராஜர் பற்றி பேசினார். அப்போது அவர், 'காமராஜர் ஒரு செயின் ஸ்மோக்கர் தெரியுமா?. எங்கேயாவது காரில் போகும்போது சாதாரணமாக சிகரெட் அடித்துக்கொண்டு வருவார். ஆனால் அதுவே ஊருக்குள் போகும்போது அவரது கைகளில் சிகரெட் இருந்தால் சீட்டுக்கு அடியில் குனிந்துகொண்டு சிகரெட் பிடிப்பார். ஏன் இப்படி தலைவரே என்று கேட்டால், 'இல்லை யாராவது சின்ன பையன் பார்த்தால்; காமராஜரே சிகரெட் பிடிக்கிறார். நாம் பிடித்தால் என்ன தவறு என தோன்றிவிடும். அதனால்தான் இப்படி' என கூறியதாக ராமன் சொன்னார்" என்றார் சரண். இந்தப் பேட்டி இப்போது ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











