ஒரு செடியில ஒரு பூ தான் பூக்கும்... காலத்தை வென்ற 'காதல்' காவியங்கள்
சென்னை: ஜாதி, மதம், இனம், மொழி, பணம், ஏழை, பணக்காரர் என்று எந்தவித பாகுபாடும் பாராமல் யாரிடமும் இயல்பாக வரும் விஷயம்தான் காதல்.
பார்த்த காதல் , பார்க்காத காதல், பேசிய காதல், பேசாத காதல், சொல்லாத காதல், ஒருதலைக்காதல் என்று எத்தனையோ விதத்தில் ஒவ்வொரு உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது காதல்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிகபட்ச அதிர்வுகளை ஏற்படுத்திய ஒருசில காதல் காவியங்களை இங்கே காணலாம்.

ஒருதலை ராகம்
காதலை சொன்னால் கூட காதலியின் மனம் வாடிவிடும் என்று கடைசிவரை காதலை உள்ளுக்குள் வைத்துப் புதைத்து கடைசியில் இறந்துவிடும் காதலனின் கதை. காதலன், காதலியாக சங்கர், ரூபா நடித்திருந்த ஒருதலை ராகம் தமிழ்நாட்டில் 365 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற வாசமில்லா மலரிது, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோயிலிலே போன்ற பாடல்கள் இன்றைய தலைமுறையினரையும் பாதிக்கும் ரகம். 'இதயம்' போன்ற படங்களுக்கு முன்னோடி என்று இப்படத்தைக் கூறலாம்.

அலைகள் ஓய்வதில்லை
சிறு வயதுக் காதலை காட்டியிருந்தாலும் மதங்களைக் கடந்து காதலிப்பதில் கார்த்திக்- ராதா ஜோடி வித்தியாசம் காட்டி இருந்தது. பாரதிராஜா, இசைஞானி கூட்டணியில் ராதா-கார்த்திக்கின் முதல் படமாக வெளியான அலைகள் ஓய்வதில்லை இருவரின் வாரிசுகளும் நடிக்க வந்த பின்னும் கூட காலத்தைக் கடந்து நிற்பது சிறப்பு. இதே போல மதங்களைக் கடந்த காதலை 'பம்பாய்' படத்தில் மணிரத்னம் காட்டியிருப்பார்.

மவுன ராகம்
திருமணத்திற்கு முன் ஏற்பட்ட காதலால் மனைவி(ரேவதி) தன்னை வெறுத்து விவாகரத்து கேட்க, பதிலுக்கு மோகன் அன்பைக் காட்டுவார். காதல் தோல்விக்குப் பின்னும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதை உணர்த்திய படமிது. மணிரத்னத்தின் சிறந்த காதல் காவியங்களில் மவுன ராகத்திற்கு ஒரு தனியிடம் உண்டு. இன்று வரும் 'ராஜா ராணி' போன்ற படங்களுக்கெல்லாம் முன்னுதாரணம் என்று மவுனராகத்தை நாம் தாராளமாகக் கூறலாம்.

காதல் கோட்டை
இந்தப் படம் வந்த புதிதில் 'இதயத்தில் ஆரம்பித்து கண்களில் முடியும் காதலை' நிறைய பேர் விரும்பினார்கள். அஜீத் - தேவயானி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே காதலித்து, கடைசியில் ஒன்றிணைவதை சுவாரசியம் கலந்த திகிலுடன் காட்டியிருப்பார் அகத்தியன். இன்று இருக்கும் பேஸ்புக் காதலுக்கு முன்னோடி என்று இந்தப் படத்தைக் கூறலாம்.

பூவே உனக்காக
'ஒரு செடியில ஒரு பூ மட்டும்தான் பூக்கும்' என்று விஜய் உருகி, உருகிக் காதலித்த படமிது. காதலி தன்னை விரும்பவில்லை என்று தெரிந்ததும் அவளைப் பழிவாங்காமல் விரும்பிய பையனை மணமுடிக்க விஜய் உறுதுணையாக இருப்பார். விக்ரமன் இயக்கத்தில் வெளியான இப்படம் விஜய்யின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றும் திகழ்கிறது.


Click it and Unblock the Notifications











