காலத்தால் அழியாத வாலி..எழுத்துக்களால் இதயம் தொட்டவரின் வெற்றி வரிகள் !
சென்னை : கவிஞர் வாலி காற்றோடு கரைந்து சரியாக இன்றோடு ஒன்பது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நாளில் வாலியின் ரசிகர்கள் அவரை நினைத்து உருகி வருகின்றனர்.
வாலியின் தெய்வீக வரிகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. காதல், ஊடல்,காமம், சோகம், மகிழ்ச்சி,ஏக்கம் என அனைத்துக்கும் உயிர் தந்து அழகுக்கு அழகு சேர்த்து பாடலில் புகுத்தி உருகவைத்துவிடுவார்.
பல ஆயிரம் பாடல்கள் எழுதிய வாலி, இலக்கிய உலகிலும், இசை உலகிலும் ஈடு இணையற்று கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறார். அவரின் பாடல் வரியில் மனதை தொட்ட சில பாடல்கள்.

கவிஞர் வாலி
கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படித்துள்ள வாலி,சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். எழுத்தாளராக ஆசைப்பட்ட வாலி, நண்பர்களுடன் சேர்ந்து, நேதாஜி'என்ற கையெழுத்து பத்திரிகையை தொடங்கினார். பின்னர் , திருச்சி வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதினார்.

4 தலைமுறை நாயகன்
பாடலாசிரியர் ஆகவேண்டும் என்ற இவரது கனவு பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு 1958ம் ஆண்டு நனவானது. அழகர் மலை கள்வன் படத்தில், நிலவும் தரையும் நீயம்மா என்ற பாடலை முதல் முதலாக வாலி எழுதி பாடல் ஆசிரியர் ஆனார். இந்த பாடலுக்கு டி.கோபாலன் இசையமைக்க பி.சுசிலா பாடினார். இதன் பிறகு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினி, கமல்,விஜய்,அஜித், தனுஷ்,சிம்பு என இன்றைய இளைய முன்னணி கதாநாயகர் வரை அனைவரின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.

பக்தி பாடல்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்.. கந்தனே உனை மறவேன்? டி.எம்.சௌந்தரராஜனின் கம்பீரமான குரலில் இந்த பாடலை எப்போது கேட்டாலும் மனதிற்குள் ஓர் புத்துணர்ச்சி பிறக்கும். இந்தபாடல் வாலியின் வரியழகில் அனைவரையும் பக்திபரவசத்தில்ஆழ்த்தியது.

உன் விழியும்..என் வாலும் சந்தித்தால்
1968ம் ஆண்டு வெளியான குடியிருந்த கோயில் படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட்டடித்தது.அதில் உன் விழியும்..என் வாலும் சந்தித்தால் என்ற ரொமான்டிக் பாடலும்,என்னைத் தெரியுமா ?.. நீயேதான் எனக்கு மணவாட்டி என ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு வெரைட்டி கொடுத்திருப்பார்.

சின்னத்தாயவள்
ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் குழந்தையை பிரிந்து பரிதவிக்கும் தாயின் ஏக்கத்தை வரிகளால், வலிகளை கோர்த்து கொடுத்து இருப்பார். சின்னத்தாயவள் தந்த ராசாவே என பாடல் தொடங்கியதுமே மனசுக்குள் ஏதோ ஓர் உணர்வு புகுந்து நம்மை ஆண்கொள்ளும். அதுமட்டுமா, அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. காலையில் தினமும் கண் விழித்தால் என தாயை நினைத்து உருக வைத்த கவிஞன்.

இளையராஜா
கண்ணன் ஒரு கைக்குழந்தை, சின்னப்புறா உந்தன் எண்ணக் கனாவினில், ராசாவே உன்ன நான் எண்ணித்தான் போன்ற பல பாடல்கள் வாலி-இளையராஜா கூட்டணியில் திரை இசையில் அருதிப் பெரும்பான்மை பெற வைத்தன.

ஏராளமான பாடல்கள்
எஜமான், காதலன், ராஜாவின் பார்வையிலே, இந்தியன், காதலர் தினம், ஹே ராம், பிரியமானவளே, மின்னலே, மௌனம் பேசியதே, கஜினி, சந்திரமுகி, வல்லவன், 'சிவாஜி, சென்னை 600028, சில்லுனு ஒருகாதல், தசாவதாரம், நாடோடிகள், நான் கடவுள், கோவா, அயன், மங்காத்தா, எதிர்நீச்சல் போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார்.

காலத்தால் அழியாத காவியம்
எழுத்தில் இருந்த வேகம் - இசையில் இருந்த ஞானம் - சொற்களில் இருந்த எளிமை - சொல்லில் இருந்த புதுமை... இவைதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோடம்பாக்கத்தில் வாலி தன் பாட்டுக் கொடியை பறக்கவிட்டதற்கான காரணம் ஆகும். காலத்தால் அழியாத பல பாடல்களை தந்த காவிய நாயகனின் பாடல்கள் காலம் கடந்தும் பேசும்.


Click it and Unblock the Notifications











