துபாய் ரசிகர்களிடம் சிக்கித் தவித்த நயனதாரா - பிரபுதேவா

நயனதாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இப்போது கல்யாணத்தில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் தனி பங்களா ஒன்றில் இருவரும் குடித்தனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திருமணச் செய்தியை இருவரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், நயனதாராவும், பிரபுதேவாவும் துபாய்க்கு ஜோடியாக சென்றுள்ளனர். துபாயில்தான் நயனதாராவின் அண்ணன் வசிக்கிறார். அவரிடம் பிரபுதேவாவை அறிமுகப்படுத்தவே நயன் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.
துபாய் சென்ற இருவரும் ஜோடியாக ஷாப்பிங் மால் ஒன்றுக்கு போனார்கள். பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்கள், செருப்பு உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்தார் நயன்.
இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் இருந்த ஒரு கடைக்குத் தெரியாத்தனமாக போய் விட்டனர். இருவரையும் ஜோடியாக பார்த்த ரசிகர்களுக்கு குஷியாகி விட்டது.
இருவரையும் சூழ்ந்து கொண்டனர். கையில் இருந்த கேமராக்கள், செல்போன் கேமராக்கள் மூலம் இருவரையும் படம் பிடித்துத் தள்ளினர். ஆளாளுக்கு ஆட்டோகிராபும் கேட்டனர். இருவரையும் ஜோடியாக சேர்ந்து நிற்குமாறு கூறி புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் அதற்கு மட்டும் பிரபுதேவா, நயன் சம்மதிக்கவில்லையாம்.
ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நீண்ட நேரமாக விடாததால் நயனதாராவும், பிரபுதேவாவும் அங்கிருந்து கிளம்ப பெரும்பாடு பட வேண்டியதாயிற்று.
ஒரு வழியாக அத்தோடு ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு ரசிகர்களின் அன்புப் பிடியிலிருந்து மீண்டு வெளியேறினார்களாம் நயனும், பிரபுதேவாவும்.


Click it and Unblock the Notifications











