ஜெ வெற்றி: திரையுலகப் பிரமுகர்கள் மகிழ்ச்சி!
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதும், ஜெயலலிதா முதல்வராவதும் குறித்தும் சினிமா பிரபலங்கள் பலர் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
கே.ஆர்.ஜி.
ஜெயலலிதா வெற்றி குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி. கூறியதாவது:
"இந்த தேர்தலில், அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. தர்மம் வெற்றி பெற்று இருக்கிறது. அதர்மம் தோல்வி அடைந்து இருக்கிறது,'' என்றார்.
கேயார்
தயாரிப்பாளரும் இயக்கநருமான கேயார் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ஆசைப்பட்டார்கள். அவர்களின் ஆசை நிறைவேறி விட்டது. சினிமா உலகில், யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம். ஆனால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தியவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு பாடம்,'' என்றார்.
'கலைப்புலி' ஜி.சேகரன்
திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் கூறியதாவது:
"இந்த தேர்தல் முடிவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அரசியலில் மாற்றம் ஏற்பட்டது போல், எங்கள் திரையுலகிலும் மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.
இவர்கள் தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்தித்து பல்வேறு பிரச்சினை குறித்து முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











