ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் கிஷோர் குமார்... டூடிளில் படம் வெளியிட்டு பெருமை செய்த கூகுள்!
இன்று கூகுள் டூடிளில் நீங்கள் பார்க்கும் உருவம்... இந்திய திரை இசையின் ஒப்பற்ற பாடகர், மிகச் சிறந்த நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் கிஷோர் குமார்.
இன்று அவரது 85 வது பிறந்த நாள் என்பதால், அவரது உருவத்தை டூடிளில் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது கூகுள். அநேகமாக டூடிளில் இடம்பெற்ற முதல் இந்தியப் பாடகர் கிஷோர் குமாராகத்தான் இருக்கும்.

காரணம், கிஷோர் குமாரின் நவரசம் மிளிரும் குரல். எந்த வகைப் பாடலாக இருந்தாலும், அதைச் சற்றும் சிரமமின்றி, அந்த பாடலின் பாவனையோடு பாடும் அவரது ஸ்டைல்.
அப்பாஸ் குமார் கங்குலி என்ற இயற்பெயரோடு, 1929, ஆகஸ்ட் 4-ம் தேதி ஒரு வங்காள குடும்பத்தில் பிறந்தவர் கிஷோர் குமார். பிறந்த மாநிலம் மத்திய பிரதேசம்.

கிஷோரின் அண்ணன் அசோக் குமார் இந்திய சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர்.
சினிமா ஆசையில் மும்பைக்கு இடம்பெயர்ந்த கிஷோர் குமார், 1946-ல் ஷிகாரி என்ற படத்தில் ஒரு நடிகராகத்தான் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து நௌக்ரி உள்பட பல படங்களில் நடித்தார்.

1956-ல்தான் அவருக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு முதல் வாய்ப்பு தந்தவர் சலீல் சவுத்ரி. இத்தனைக்கும் முதலில் கிஷோரை வேண்டாம் என்று நிராகரித்த சலீல் சவுத்ரி, பின்னர் அவர் குரலைக் கேட்டு வாய்ப்புத் தந்தாராம். படம் நௌக்ரி, பாடல் சோடா சா கர் ஹோகா.
பின்னர் கிஷோரின் குரலின் இனிமை உணர்ந்து தொடர்ந்து வாய்ப்புகள் தந்தவர் அன்றைய இசை மேதை எஸ்டி பர்மன். இவரது மகன் ஆர்டி பர்மனும் கிஷோரும் மிக நெருக்கமான நண்பர்களாகத் திகழ்ந்தனர்.
ஆர் டி பர்மன் - கிஷோர் குமார் இணையில் வெளியான அத்தனைப் பாடல்களும் அற்புதங்கள் நிகழ்த்தின என்றால் மிகையல்ல. இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கும் இனிய இசையைத் தந்தவர்கள் இந்த இரு மேதைகளும்.

திரையுலகினரும் ரசிகர்களும் கிஷோர் குமாரை கிஷோர்தா என அன்புடன் அழைத்தனர்.
இந்தி தவிர வங்காளம், மராத்தி, குஜராத்தியிலும் பாடல்கள் பாடியுள்ளார் கிஷோர் குமார். 19 முறை பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, 8 முறை அந்த விருதை வென்றவர் கிஷோர் குமார். பின்னாளில் அவர் பெயரிலேயே ஒரு விருதினை நிறுவி, கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது மத்திய பிரதேச அரசு.
1987-ம் ஆண்டு தனது 58வது வயதில் மரணத்தைத் தழுவினார் கிஷோர் குமார். இந்திய இசை, குறிப்பாக பாலிவுட்டைப் பொறுத்தவரை இன்று வரை ஈடு செய்ய முடியாத பேரிழப்புகளில் ஒன்று கிஷோர் குமாரின் அகால மரணம்.
கிஷோர் குமாருக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இன்றும் கிஷோர் குமாரின் நினைவைப் போற்றும் வகையில் அடிக்கடி அவரது பாடல்களை கச்சேரிகளாக நடத்தி வருகின்றனர். எவ்வளவு புதுப் பாடல்கள் வந்தாலும், கிஷோர் குமார் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தால், உலகையே மறந்து அவர் குரலோடு ஒன்றிப் போகிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











