சென்னையில் ஒரு மழைக்காலம்... மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுதம் மேனன் இயக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம் படப்பிடிப்பு இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது.
நான்கைந்து வருடங்களுக்கு முன் கவுதம்மேனன் தொடங்கிய படம் 'சென்னையில் ஒரு மழைக்காலம்'. இந்தப் படத்தில் சூர்யா, அசின் ஜோடியாக நடிப்பதாக இருந்தது.
இருவரும் இப்படத்துக்கான போட்டோ செஷனிலும் பங்கேற்ற நிலையில்தான் படப்பிடிப்பு நின்று போனது. சூர்யா வேறு படங்களில் நடிக்க போய் விட்டார். அசினும் அதில் ஆர்வம் காட்டவில்லை.
அசினுக்கு பதில் த்ரிஷாவை நாயகியாகவும், மூன்று இளைஞர்களை ஹீரோக்களாகவும் வைத்து சென்னை மற்றும் ஹைதராபாதில் சில காட்சிகளை இயக்கிய கவுதம் மேனன், அத்துடன் நிறுத்திவிட்டார்.
அதன் பிறகு வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களை வெளியிட்டார். இப்போது சென்னையில் ஒரு மழைக்காலம் படப்பிடிப்பை மீண்டும் துவக்குகிறார். சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகிறது.
திரிஷா தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் பாத்திரத்தில் வருகிறார். திரிஷாவுக்கும் நான்கு இளைஞர்களுக்கும் இடையிலான நட்பும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும்தான் கதை.
ஐடி நிறுவனங்களில் பெண்கள் படும் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











