ரஜினி-கமலை இயக்க ஆசை! - கவுதம் மேனன்
ஒரே படத்தில் ரஜினி - கமல் இருவரையும் வைத்து இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், என்றார் இயக்குநர் கவுதம் மேனன்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கவுதம் மேனன், தனது அடுத்த படமான நடுநிசி நாய்கள் படத்தின் விளம்பர வேலைகளில் மிகத் தீவிரமாக உள்ளார்.
இந்த படத்தில், வீரா கதை நாயகனாக அறிமுகமாகிறார். இவர், கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி டைரக்டராக இருந்தவர். நாயகியாக சமீரா ரெட்டி நடித்துள்ளார்.
படத்தை பற்றி கவுதம் வாசுதேவ் மேனன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "கடந்த வருடம் நான் ஒரு டாக்டரை சந்தித்து பேசும்போது, அவரிடம் சிகிச்சை பெறுகிற ஒரு விசித்திரமான மனநோயாளி பற்றி கூறினார். அப்போதுதான் நடுநிசி நாய்கள் படத்தின் கரு உருவானது.
அந்த மனநோயாளியாக யாரை நடிக்க வைப்பது? என்று யோசித்தபோது, என் உதவியாளர் வீரா கண்ணில் பட்டான். அவனிடம் எப்போதுமே ஒரு தேடல் இருக்கும். அந்த தேடல்தான் அவனை கதை நாயகனாக தேர்வு செய்ய வைத்தது.
படத்தை முடித்து முதல் பிரதி தயாரானதும், படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். அதற்காக வெவ்வேறு துறைகளை சேர்ந்த 35 பேர்களை தேர்வு செய்து படம் பார்க்க வைத்தோம்.
படம் முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது, வீராவைப் பார்க்க பயந்தார்கள். அது, எனக்கு கிடைத்த வெற்றி.
த்ரிஷாவுக்கு பதில் எமி ஜாக்ஸன்:
அடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்குகிறேன். மறைந்த இந்தி நடிகை ஸ்மிதா பாட்டீலின் மகன் பிரதிக் கதாநாயகனாக நடிக்கிறார். திரிஷா நடித்த வேடத்தில், எமி ஜாக்சன் நடிக்கிறார். டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை உருவாக்குகிறேன்.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன்:
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நடக்குமா தெரியவில்லை,'' என்றார்.


Click it and Unblock the Notifications











