திருநாவுக்கரசர் மகன் திருமண வரவேற்பு.. ஆளுநர் ரோசய்யா, ரஜினி நேரில் வாழ்த்து!

முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் -தி.ஜெயந்தி தம்பதியின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும், சென்னை நொளம்பூரை சேர்ந்த தொழிலதிபர் சார்லஸ் மோகன்-சி.ஷீலா தம்பதியின் மகள் உதயா என்ற டாக்டர் சி.ராகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மணமக்களின் பெற்றோர் வரவேற்றனர். தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.
திருநாவுக்கரசரின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதேபோல், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக இணை வேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, டி.ஆர்.பாலு எம்.பி, இயக்குநர் எஸ்பி முத்துராமன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











