இப்படியெல்லாம் புரபோஸ் பண்ணா.. பட்டுன்னு ஓகே சொல்லிடுவாங்க.. காதலர்கள் கொண்டாடிய டாப் 5 சீன்கள்!
சென்னை: உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. அந்த நாளுக்காக காதலர்கள் அனைவருமே வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். அன்றைய தினத்தில் காதலர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக்கொள்வது, பரிசுகளை கொடுத்துக்கொள்வது என தரையில் இருந்துகொண்டே விண்ணில் பறந்துகொண்டிருப்பார்கள். இந்தச் சூழலில் தமிழ் சினிமாவில் சிறந்த ஐந்து லவ் ப்ரோபோஸ் சீன்களை இதில் பார்க்கலாம்.
நீரின்றி அமையாது உலகு என்பதை போல் காதலின்றியும் அமையாது உலகு. இப்புவியில் இருக்கும் உயிரினங்களை அச்சாணி போல் சுழற்றிக்கொண்டிருப்பது காதல் மட்டும்தான். இந்த உலகத்தில் காதலிக்காதவர்கள் யாருமே இல்லை. எல்லோருமே ஒரு காதலையாவது கடந்து வந்திருப்போம். காதலிப்பவர்களுக்கும், காதலிக்கப்படுபவர்களுக்கும் ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான். இருந்தாலும் அதற்கென்று தனியாக ஒரு நாள் இருப்பது எப்போதும் ஸ்பெஷல்தானே. அப்படித்தான் பிப்ரவரி 14. அந்த நாளுக்காக காதலர்கள் எப்போதும் காத்திருப்பார்கள். சூழல் இப்படி இருக்க தமிழ் சினிமாவில் சிறந்த 5 ப்ரோபோஸ் சீன்களின் லிஸ்ட் இங்கே.

அலைபாயுதே: மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான படம் அலைபாயுதே. இந்தப் படத்தில் மாதவனும், ஷாலினியும் நடித்திருந்தார்கள். இன்றுவரை மிகச்சிறந்த காதல் படங்களின் லிஸ்ட்டை எடுத்துக்கொண்டால் அதில் கண்டிப்பாக டாப் 3க்குள் இந்தப் படம் வந்துவிடும். ஒவ்வொரு சீனையும் மணிரத்னம் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார். முக்கியமாக ஷாலினியிடம் மாதவன் காதலை சொல்லும் காட்சி. அதில் இடம்பெற்ற வசனமான, 'நான் உன்ன விரும்பல.. உன் மேல ஆசைப்படல.. நீ அழகா இருக்கனு நினைக்கல.. ஆனால் இதெல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு' என்று மாதவன் கூறும்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் காதலை சொல்வதற்கு புது ஐடியா கிடைத்தது.

பம்பாய்: அலைபாயுதேவில் காதலை சொல்லும் காட்சி போல் பம்பாய் படத்திலும் மணிரத்னம் எழுதிய காட்சியும் வசனமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ரொம்பவே சென்சிட்டிவ்வான சப்ஜெக்ட்டை எடுத்துக்கொண்டு அதில் காதலை மைய நீரோட்டமாக கலப்பது எப்போதுமே மணிக்கு கை வந்த கலை. கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் ந்டித்திருந்தார்கள். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம். அந்தப் படத்தில் அரவிந்த் சாமி ஒரு படகில் வைத்து மனிஷா கொய்ராலாவிடம், 'நான் உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வருவேன். நீ வருவியா' என்று கேட்குமிடத்தில் ஒரு காதலை ஐ லவ் யூ என்று சொல்லாமலே ப்ரோபோஸ் செய்ய முடியுமா என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்தார் இயக்குநர்.

வேட்டையாடு விளையாடு: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கௌதம் மேனன். இவரும் காதல் காட்சிகளை எழுதுவதில் கைதேர்ந்தவர்தான். ஏகப்பட்ட காதல் காட்சிகளை அவர் எடுத்திருந்தாலும் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலினி முகர்ஜியிடம் கமல் ஹாசன் காதலை சொல்லும் இடம் அவ்வளவு ரசிக்க வைக்கும். ஒரு ஃபங்ஷனில் ஹீரோயினை பார்க்கும் ஹீரோ, பார்த்தவுடன் காதலை சொல்லிவிடுவார். அதற்கு கமலினியோ பார்த்து இரண்டு மணி நேரம்கூட ஆகவில்லை அதுக்குள்ள காதலா என்று கேட்பார். அதற்கு கமல் ஹாசன், '2 நிமிஷத்திலேயே சொல்லிருப்பேன். நீ தப்பா எடுத்துக்குவனுதான் இரண்டு மணி நேரம் பொறுத்திருந்தேன்' என படு கேஷுவலாக சொல்வார். அதோடு மட்டும் நிறுத்தாமல் திருமணத்துக்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்வேன் ஜாலியாக இருப்பேன் என்று அந்தப் பெண்ணுக்கு தகுந்த நம்பிக்கையையும் ரொம்பவே இயல்பாக சொல்லியிருப்பார்.

என்னை அறிந்தால்: வேட்டையாடு விளையாடு படம் போலவே என்னை அறிந்தால் படத்திலும் காதலை அஜித் திரிஷாவிடம் வெளிப்படுத்தும் காட்சி ரசிக்க வைக்கும். திரிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்தாலும்;கணவனை இழந்த பெண்ணிடம் எப்படி ஒரு காதலை சொல்ல வேண்டும் என முதிர்ச்சியோடு அந்த ப்ரோபோசலை அணுகியிருப்பார் கௌதம் மேனன். அஜித் திரிஷாவிடம், 'எடுத்ததுமே நாம் திருமணம் செய்துகொள்ளலாமா' என்று கேட்டுவிட்டு; 'நமக்கென்று குழந்தை வேண்டாம். ஈஷாவே போதும் (படத்தில் திரிஷாவின் மகள்). என்ன அடிக்கடி மெடிக்கல் ஷாப்புக்கு போக வேண்டியதிருக்கும் பார்த்துக்கொள்ளலாம்' என அவ்வளவு டீசண்ட்டாக காதலை வெளிப்படுத்த வைத்திருப்பார் கௌதம் மேனன். அதுமட்டுமின்றி ஹீரோவை ஹீரோயினிடம் தன்னுடைய சம்பளம், வாழ்க்கை முறை என அனைத்தையுமே மிக டீட்டெய்லாக சொல்ல வைத்து அசரடித்திருப்பார் கௌதம்.
நிமிர்ந்து நில்: பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் இருக்கிறது. அதாவது ஒரு இயக்குநர் எந்த மாதிரியான படங்களை அதிகம் எடுக்கிறாரோ அதை வைத்தே அவரது கம்ஃபர்ட் ஸோனை முடிவு செய்வது. ஆனால் அப்படி செய்வது அவ்வளவாக சரியில்லை. ஏனெனில் சமுத்திரக்கனி என்றாலே அட்வைஸ் தரும் படங்களைத்தான் எடுப்பார் என்கிற இமேஜ் இருக்கிறது. அப்படிப்பட்ட இமேஜோடு வந்த படம்தான் சமுத்திரக்கனி இயக்கத்தில் ரவி மோகன், அமலா பால், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்த நிமிர்ந்து நில்.
அந்தப் படத்தில் ரவி மோகன் ரொம்பவே நேர்மையாக இருப்பதால் இந்த சமூகத்தோடு ஒட்டி வாழ முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார். ஒருகட்டத்தில் ரவி மீது அமலா பாலுக்கு காதல் வந்துவிடும். தனது காதலை ரவியிடம் அமலா பால், 'உன்னை மாதிரி கண்டிப்பாக என்னால் இருக்க முடியாது. ஆனால் உன்னோடு இருக்க ஆசையாக இருக்கிறது' என்று கவித்துவத்துடன் காதலை வெளிப்படுத்துவார். நிமிர்ந்து நில் படம் வேறு இமேஜுக்குள் சென்றுவிட்டதால் இந்த சீனில் இருக்கும் கவித்துவத்தையும், அழகியலையும் பெரிதாக யாரும் கவனிக்கவில்லையோ என்றே தோன்றுகிறது.
இப்படி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காதல் ப்ரோபோசல் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன. அவற்றை பட்டியலிட்டால் வருடம் முழுக்க எழுதிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அதனால்தான் பலரது மனம் கவர்ந்த ஐந்து ப்ரோபோசல் சீன்களை பட்டியலிட்டோம். இறுதியாக, காதலர் தினம் கொண்டாடப்போகும் காதலர்களுக்கு ஃபில்மிபீட் தமிழ் சார்பாக வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











