"விக்ரம்" பட வாய்ப்பு இப்படி தான் கிடைத்தது...சந்தான பாரதி சொன்ன சுவாரஸ்ய தகவல்!
சென்னை: 1978 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சந்தானபாரதி.
70களில் இருந்து கமல்ஹாசனுடன் நட்பில் இருந்த சந்தானபாரதி அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் பட வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது என்று நடிகர் மற்றும் இயக்குநரான சந்தான பாரதி கூறியுள்ளார்.

ஆரம்பகால சினிமா வாய்ப்பு
1981 ஆம் ஆண்டு பன்னீர்புஷ்பங்கள் என்ற படத்தை சந்தானபாரதி மற்றும் பி வாசு இணைந்து இயக்கினார்கள். இந்த படத்தின் மூலம் தான் சந்தானபாரதி இயக்குனராக அறிமுகமானார். பன்னீர் புஷ்பங்கள் படத்தை தொடர்ந்து மதுமலர், மெல்ல பேசுங்கள், நீதியின் நிழல் போன்ற பல படங்களை பி வாசு உடன் இணைந்து இயக்கினார் சந்தானபாரதி.1987 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் மெகா ஹிட்டான கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து என் ஜீவன் பாடுது, கரகாட்டக்காரன், நம்மவர், மகளிர் மட்டும் போன்ற பல படங்களில் நடிகராகவும் பிரபலமானார் சந்தானபாரதி.

அன்று முதல் இன்று வரை
80-களில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததுடன், அஜித், மாதவன், விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். முகவரி, பட்ஜெட் பத்மநாபன், தோஸ்த், சமுத்திரம், வில்லன், அன்பே சிவம், நளதமயந்தி, வின்னர், வசூல்ராஜா எம்பிபிஎஸ், வரலாறு, தசாவதாரம், குசேலன், உன்னைப்போல் ஒருவன் போன்ற பல படங்கள் இவர் நடித்து ஹிட் லிஸ்டில் உள்ளது.

என் நண்பன் கமல்
நடிகர் சந்தானபாரதி மற்றும் கமலஹாசன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனாலேயே கமலஹாசன் படத்தில் பெரும்பாலான படங்களில் சந்தானபாரதியும் இணைந்து நடித்திருப்பார். கமலஹாசன் நடித்து இன்றும் பேர் சொல்லும் அளவிற்கு ஹிட் படமான குணா மற்றும் மகாநதி படங்களை இயக்கியதும் சந்தானபாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

கமலுடன் இணைந்து
அதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், அன்பே சிவம், நளதமயந்தி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், மும்பை எக்ஸ்பிரஸ், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன், தூங்காவனம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் சந்தன பாரதி. சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும் உப்பிலியப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சந்தானபாரதி. தான் நடிப்பது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த காட்சிக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர் சந்தானபாரதி.

சாப்பாடு போட்ட விக்ரம்
விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி அவர் பேசிய வீடியோ தற்போது அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது," திடீரென்று ஒருநாள் கமல்ஹாசன் எனக்கு போன் செய்து மதிய உணவுக்கு தன் ஆபீசுக்கு வரும்படி கூறியுள்ளார். எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சின்ன பையனும் எங்கள் இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இவர் யார் என்று கேட்டதற்கு இவர்தான் டைரக்டர் என்று சொன்னார்கள். இதற்கு முன்னாடி அவரை நான் பார்த்ததுகூட கிடையாது.

ஓகே சொன்ன சந்தான பாரதி
விக்ரம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் இருக்கு செய்வீர்களா? என்று கேட்டார்கள். சரி என்று சொல்லி நானும் நடித்துக் கொடுத்தேன் . படம் பார்க்கும் பொழுது தான் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் ஏஜென்ட் கதாபாத்திரம் என்பதை நான் உணர்ந்தேன். அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் நான் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார் சந்தானபாரதி. அந்த கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதையும் கூறி மகிழ்ந்துள்ளார் . எப்பொழுதுமே என்னுடைய நண்பன் கமல்ஹாசன். என்ன தான் நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் கமலின் அரசியல் வாழ்க்கையில் தான் தலையிடுவதில்லை என்றும், என்னால் முடிந்த சப்போட் நான் கமலுக்கு கொடுப்பேன் என்று கூறியுள்ளார் சந்தானபாரதி.


Click it and Unblock the Notifications











