ஸ்கிரிப்ட் வேலை, குடும்பம், சினிமா.. லாக்டவுன் நேரத்தில் என்ன செய்கிறார்கள் இந்த இயக்குனர்கள்?
சென்னை: இந்த லாக்டவுன் நேரத்தில் சில இயக்குனர்கள் அடுத்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், இப்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை எட்டியுள்ளது. உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சினிமா, டிவி தொடர், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர்.

ஆர்.கண்ணன்
இந்நிலையில், இயக்குனர்கள் இந்த நேரத்தை எப்படி பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று கேட்டோம். 'சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத், அதர்வா நடித்துள்ள தள்ளிப் போகாதே படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து இயக்கி இருக்கிறேன். கொரோனா பிரச்னைகள் முடித்ததும் ரிலீஸ் வேலைகள் தொடங்கும். இப்போது இந்த நேரத்தை அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன். அழகான கதை ஒன்றை எழுதி வருகிறேன்' என்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

சுசீந்திரன்
இயக்குனர் பாண்டிராஜ், சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். ஏற்கனவே அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருந்ததாகக் கூறப்பட்டது. அதற்கான கதையை அவர் தயார் செய்து வைத்திருந்தார். அதை இப்போது மெருகேற்றி வருகிறார். அதோடு குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார். இயக்குனர் சுசீந்திரனும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அங்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் அவர், பார்க்காமல் விட்ட முக்கியமான படங்களை பார்க்கிறாராம்.

ஸ்கிரிப்ட் வேலை
ஹரிதாஸ் இயக்குனர் குமரவேலன், இந்த நேரத்தை அடுத்த ஸ்கிரிப்ட் வேலைக்கு பயன்படுத்துகிறார். அவ்வப்போது வீட்டுவேலைகளில் மனைவிக்கு உதவி பண்ணும் அவர், மற்ற நேரங்களில் அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்துவருகிறார். இப்போது அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தை முடித்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் அந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

பெல்பாட்டம்
இயக்குனர் 'கழுகு' சத்யசிவா, கிருஷ்ணா நடிக்கும் 'பெல்பாட்டம்' படத்தை முடித்துள்ளார். இப்போது அந்த படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் முயற்சிகளில் இருக்கிறார். 'அதற்கான வேலைகள் இருந்தாலும் அடுத்தப் பட ஸ்கிரிப்ட் வேலைக்கு இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்கிறேன். முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். லாக்டவுன் முடிந்ததும் அந்த வேலைகள் தொடங்கும் என்றார்.

சமுத்திரக்கனி
இயக்குனர் மகிழ்திருமேனி, அடுத்து உதயநிதி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதமே தொடங்கி இருக்க வேண்டும். இப்போது அந்த கதையை செதுக்கி வருகிறார். வேறு கதை ஒன்றையும் உருவாக்கி வருகிறார். இயக்குனர் சமுத்திரக்கனி, இந்த லாக் டவுன் நேரத்தில் தனது செல்போனுக்கு லாக் டவுன் போட்டுவிட்டாராம். வரும் 14 ஆம் தேதி வரை அதற்கும் தடைதானாம்.


Click it and Unblock the Notifications











