"நான் சந்தனம் விற்பவன்.. சாராயம் விற்கமாட்டேன்" - சினிமா வியாபாரம் குறித்து ராஜ்கிரணின் நச் பதில்!
சென்னை: சினிமா என்பது ஒரு வியாபாரம் தான். ஆனால் அதில் சந்தனமும் விற்கலாம். சாராயமும் விற்கலாம். நான் சந்தனம் விற்பவன் என்பது நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரணின் கொள்கை.
சினிமா போன்ற வெகுஜன ஊடகத்தில் இறைவன் என்னை வைத்திருக்கிறார். அதற்கு நான் நல்லதே செய்ய வேண்டும் என எடுத்த காரியத்தில் தீவிரமாக இருப்பவர்.
அவர் கூறுவது போலவே இதுவரை தனது கொள்கைக்குப் புறம்பாக ஒரு விளம்பரத்தில் கூட ராஜ்கிரண் நடித்ததில்லை. அந்த அளவிற்கு சினிமா மூலமாக நல்லதை மட்டுமே மக்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

சினிமா ஒரு வெகுஜன ஊடகம்
சினிமா என்பது வெகுஜன ஊடகம். அந்த ஊடகம் வாயிலாக நல்லதையும் காட்டலாம். கெட்டதையும் காட்டலாம். நான் அதில் கற்பூரம் விற்பேன், சந்தனம் விற்பேன், பூ பழம் விற்பேன், ஆனால் சாராயம் விற்கமாட்டேன். காரணம், சினிமா போன்ற வெகுஜன ஊடகத்தில் இறைவன் என்னை வைத்திருக்கிறான். அதற்கு நான் நன்றியோடு, அதில் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் எனப் பேட்டி ஒன்றில் ராஜ்கிரண் தெரிவித்திருக்கிறார்.

எனக்கு நடிக்கத் தெரியாது
நடிப்பு பற்றி எந்த ஒரு அடிப்படை விஷயமும் எனக்குத் தெரியாது. ஆனால் எனது குணாதிசியத்திற்கு ஏற்ப, என்னுடைய இயல்புக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதால் பார்ப்பதற்கு சிறப்பாக நடிப்பது போல் தோன்றுகிறது. வாழ்க்கையில் எத்தனையோ கஷ்ட நஷ்டங்கள், பணத் தேவைகள் ஏற்பட்ட போதும் கூட, பிடிக்காத கதையிலோ, கதாபாத்திரத்திலோ நடித்ததில்லை. அதனால் தான் நான் ஹீரோவாகி 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆன போதும் கூட, மிகக் குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன் என ராஜ்கிரண் நடிப்பு பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

இயக்குநர் ஷங்கரின் ஆசை
சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக என்னை நடிக்க வைக்கலாம் என இயக்குநர் ஷங்கர் நினைத்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்திற்கு என்னைப் பற்றி ஏற்கனவே நன்கு தெரியும். நான் நெகட்டிவ் கேரக்டர் பண்ணமாட்டேன் என ஷங்கரிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஷங்கரோ அவர் தான் அக்கதாப்பாத்திற்குப் பொருத்தமாக இருப்பார். நான் எதற்கும் கேட்டுப் பார்க்கிறேன் என என்னை அணுகினார். ஆனால் நான் அந்தக் கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டேன் என்கிறார் ராஜ்கிரண்.

33 படங்களில் மட்டுமே
இதை சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். கடந்த 1989-ம் ஆண்டு 'என்ன பெத்த ராசா' திரைப்படத்தின் மூலம் நடிகராகக் களமிறங்கிய ராஜ்கிரண் தற்போது நடப்பு ஆண்டு 2022 வரை மொத்தம் 33 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் மிகக் குறைந்த படங்களை அவர் செய்திருந்தாலும் கூட அவரது கதாப்பாத்திரங்கள் இப்போது வரை பேசப்படுகின்ற கதாப்பாத்திரங்களாக இருப்பதே அவரின் மிகப் பெரிய சாதனை எனலாம். 1000 படங்கள் நடிப்பது முக்கியமல்ல அதில் எத்தனை படங்களில் மக்களின் மனங்களில் நின்றிருக்கிறோம் என்பதே ஒரு நடிகனின் வெற்றி என்பது போல ராஜ்கிரண், மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications











