எனக்கு மூட நம்பிக்கை கிடையாது... சுஹாசினி கேட்ட கேள்விக்கு ரஜினி சொன்ன சுவாரஸ்ய பதில்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தீவிரமான ஆன்மிகவாதி. இமையமலைக்கு அடிக்கடி சென்று தியானம் மேற்கொள்வார், ஶ்ரீ ராகவேந்திரரின் தீவிர பக்தர் என்பது ஊர் அறிந்த விஷயம்.
ஆனால் என்னதான் ஆன்மிகவாதியாக இருந்தாலும், எனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது என்று வெளிப்படையாகவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை சுஹாசினி ரஜினிகாந்தை ஒரு முறை பேட்டி எடுத்தார். அது இயக்குநர் இமயம் பாலசந்தரை மையப்படுத்திய பேட்டி. அதில்தான் ரஜினிகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்

அபூர்வ ராகங்கள்
நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில், தலைப்பிற்கு ஏற்றார் போல ஒவ்வொரு கதாப்பாத்திரம் அறிமுகம் ஆகும்பொழுதும் இசை சம்மந்தப்பட்ட சொற்களை திரையில் காட்டி அறிமுகப்படுத்தி இருப்பார் இயக்குநர் பாலச்சந்தர். கமல் வரும் முதல் காட்சியில் சரளி வரிசை எனவும் ரஜினிகாந்த் தோன்றும் முதல் காட்சியில் சுருதி பேதம் எனவும் போட்டிருப்பார்.

சுருதி பேதம்
சுருதி பேதம் என்றால், ஒரு இசை நல்ல முறையில் சீராக ஒலித்துக் கொண்டிருக்கும்போது, அதிலிருந்து தப்பாக ஒலிக்கக் கூடிய ஒலிதான் சுருதி பேதம். அதாவது அபஸ்வரம். அபூரவ ராகங்கள் திரைப்படத்தில் ஶ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற ஆனந்தத்தில் கமல் இருக்கும்போது, ஶ்ரீவித்யாவின் முன்னாள் கணவரான ரஜினிகாந்து அங்கு வருவார். நன்றாக சென்று கொண்டிருக்கும் கமல் வாழ்க்கையில் தவறான நேரத்தில் என்ட்ரி கொடுக்கும் கதாப்பாத்திரம் என்பதால் பாலச்சந்தர் அந்தச் சொற்களை பயன்படுத்தியிருப்பார்.

சுஹாசினி இண்டர்வியூ
இந்தக் காட்சியை குறிப்பிட்டு, முதன் முறையாக திரையில் தோன்றும்போது இயக்குநர் இப்படி அபசகுனமான சொல்லை போட்டுவிட்டாரே என்று என்றைக்காவது நீங்கள் வருத்தப்பட்டதுண்டா என்று சுஹாசினி கேட்க, எனக்கு மூட நம்பிக்கை இல்லை. அதனால் நான் வருத்தப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் பாலச்சந்தர் அவர்கள் முதலில் இயக்கிய படத்திற்கு நீர்க்குமிழி என்றுதான் தலைப்பு வைத்திருந்தார். அதற்காக அவர் என்ன நீர்க்குமிழி போலவா ஆகிவிட்டார்? இரும்புக்குமிழி போலல்லவா இருக்கிறார். மேலும், அவர் அப்போதே பல டெக்னிக்குகளை பயன்படுத்தியிருப்பார். அதில் ஒன்றுதான் இது என்று ரஜினிகாந்த பதிலளித்திருப்பார்.

பாலச்சந்தர்-கமல் கூட்டணியில் பிடித்தது
மேற்கொண்டு, பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்ததில் எந்தக் காட்சி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு, புன்னகை மன்னன் படத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மலையிலிருந்து கீழே விழுந்து மரத்தில் மாட்டிக்கொள்ளும்போது கமல் நடித்த காட்சிதான் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும். எப்போது பார்த்தாலும் மெய் சிலிர்த்து போய்விடுவேன் என்றும் ரஜினி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











