அந்த ஜானரில் படம் பண்ணா, கதைய தாண்டி இயக்குநர் யாருன்னும் பார்ப்பேன்... சிவகார்த்திகேயன் பக்கா ஸ்கெட்ச்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிரின்ஸ்.
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் குறித்தும் தன் எதிர்கால படங்கள் குறித்தும் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

பிரின்ஸ்
ஒரு இந்திய இளைஞனும் ஒரு பிரிட்டிஷ் பெண்ணும் காதலிப்பதுதான் கதை. படத்தில் கூறப்பட்டுள்ள ஊரும், ஊர் மக்களும் முழுக்க முழுக்க இயக்குநரின் கற்பனையே. டிரைலரில், ஒரு இந்தியனாக இருந்து கொண்டு எப்படி ஆங்கிலப் பெண்ணை காதலிக்கலாம் என்று அந்த ஊர் மக்கள் பேசுவார்கள். அதேபோல ஒரு தாத்தாவிடம், இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நிறைய நடந்துள்ளதா என்று ஒரு நிருபர் கேட்க, ஆம் நிறைய நடந்துள்ளது ஆனால் இதுதான் ஃபர்ஸ்ட் டைம் என்று கூறுவார். இப்படித்தான் இயக்குநர் அனுதீப் திரைப்படம் முழுக்க கையாண்டிருக்கிறார் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

சவால்
இயக்குநர் அனுதீப்பின் தாய்மொழி தெலுங்கு. அதனால் தெலுங்கில் கதை எழுதும் போது எளிதாக நகைச்சுவை காட்சிகள் எழுதிவிடுவார். அதனை தமிழுக்கு கொண்டு வருவதுதான் சவாலாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றி மேற்கொண்டு இதேபோல பலரையும் முயற்சி செய்ய வைக்கும். இரு மொழிகளில் இருந்து நடிகரும் இயக்குனரும் சேரும்பொழுது அந்தப் படத்தை அதிக மக்கள் பார்ப்பார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் நிறைய பொருட்செலவில் படம் எடுக்க முன்வருவார்கள் என்று சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

முதல் தீபாவளி
முன்பெல்லாம் தீபாவளி சமயம் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும். திருவிழாவோடு சேர்ந்து அந்தப் படங்களையும் திருவிழா போல கொண்டாடுவோம். இப்பொழுது என் படமே தீபாவளிக்கு வருகிறது என்று நினைக்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் படத்துடன் சர்தார் திரைப்படமும் வெளியாகிறது. இரண்டு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்று கார்த்திக்கிற்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். பி.எஸ்.மித்ரன் இதற்கு முன்பு இயக்கியிருந்த ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது

சீரியஸ் திரைப்படம்
ஒரு முழு நீள சீரியஸ் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு நடிகனாக கண்டிப்பாக எல்லா வகையான படங்களிலும் நடிக்க வேண்டும். ஆனால் நகைச்சுவை படம் எடுத்தால் எப்படி குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கக்கூடிய விதமாக இருக்கிறதோ, அதேபோல ஒரு சீரியஸான கதையை எடுக்கும்போது அப்படிப்பட்ட கதை களத்தைதான் தேர்வு செய்வேன். கதையையும் தாண்டி அந்த இயக்குநர் யார் என்பதையும் பார்த்துவிட்டுத்தான் அப்படிப்பட்ட படங்களில் நடிப்பேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











