படத்தின் முக்கிய காட்சிக்கு இளையராஜா இசையமைக்கவில்லை... ஏன் என்று திரையரங்கில்தான் தெரிந்தது - பி.வாசு
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தொடர்ச்சியாக நான்கு தென்னிந்திய மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்கிக் கொண்டிருப்பவர் பி.வாசு.
17 ஆண்டுகளுக்கு முன்னர் தனது இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியடைந்த தன் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறார்
இந்நிலையில் சின்னதம்பி திரைப்படத்தை பற்றியும் இளையராஜா பற்றியும் அவர் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

இளமை ஊஞ்சலாடுகிறது
இயக்குநர் ஸ்ரீதரிடம் துணை இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் பி.வாசு மற்றும் சந்தன பாரதி. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் தன் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தை ஆரம்பித்தபோது, அப்போது வளரும் இசையமைப்பாளராக இருந்த இளையராஜாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று வாசு மற்றும் சந்தானபாரதி யோசனை கூறியிருக்கிறார்கள். முதலில் ஸ்ரீதர் அவர்கள் ஆலோசனைக்கு கோபித்துக் கொண்டாலும் பின்னர் இளையராஜாவை ஒப்பந்தம் செய்திருப்பார்.

பன்னீர் புஷ்பங்கள்
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பி.வாசு மற்றும் சந்தான பாரதி பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானபோது இளையராஜா உச்சத்தில் இருந்தாராம். தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று எதுவும் சொல்லாமல் படம் முழுக்க வேலை செய்து இறுதியாக பின்னணி இசை பணிகளும் முடிந்து விட்ட நிலையில் சம்பளம் எவ்வளவு என்று இருவரும் கேட்டபோது, எனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம் என்று தன்னுடைய அன்பை காட்டியிருக்கிறார் இளையராஜா.

சின்ன தம்பி
பி.வாசு இயக்கிய பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதில் குறிப்பாக பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படம் என்றால் அது சின்னதம்பி. மக்கள் மனதில் இன்றுவரை நிலைத்திருக்கும் அந்தப் பாடல்களை வெறும் 35 நிமிடங்களில் இளையராஜா கம்போஸ் செய்து கொடுத்தார் என்று பி.வாசு பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

தாலி காட்சி
சின்னத்தம்பி திரைப்படத்தின் மையக்கருவே பிரபுவிற்கு குஷ்புவிற்கும் திருமணம் ஆனது அவர்களது அண்ணனுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்பதுதான் படத்தினுடைய மிக மிக முக்கியமான காட்சி. அந்தக் காட்சிக்கு குறிப்பாக தாலி காட்டப்படும் அந்த ஷாட்டிற்கு எந்த விதமான இசையும் அமைக்கவில்லையாம் இளையராஜா. அது முக்கிய காட்சி என்பதால் அதிக ஒலியுடன் இசை இருக்க வேண்டுமே என்று வாசு கேட்டதற்கு இல்லை அங்கு இசை இருக்கக்கூடாது என்று இளையராஜா கூறினாராம். அவர் மீது நம்பிக்கை இருந்த காரணத்தினால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவரும் அப்படியே விட்டுவிட்டார்.

திரையரங்க அனுபவம்
திரையரங்கில் படத்தை பார்க்கும் போது சரியாக அந்த காட்சிக்கு மக்கள் வருத்தம் அடைவதுபோல் சத்தம் எழுப்பி ரியாக்ட் செய்துள்ளார்கள். அது திரையரங்கம் முழுக்க கேட்டிருக்கிறது. பின்னர் வாசு இளையராஜாவை சந்தித்தபோது அந்த காட்சியை பற்றி கேட்டிருக்கிறார் இளையராஜா. அப்போது பி.வாசு இந்த விஷயத்தை கூறியதும் இதனால்தான் நான் அந்த இடத்தில் இசையமைக்கவில்லை, அங்கு மக்கள் ரியாக்ட் செய்யும் பொழுது அது திரையரங்கில் ஒரு அனுபவத்தை தரும். இசையை விட அந்த அனுபவம் மக்களை இன்னும் படத்தில் ஒன்றிப் பார்க்க வைக்கும் என்ற இளையராஜா கூறியதாக பி.வாசு அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications