தேசத்தின் பெருமை இளையராஜா! - மோகன்பாபு புகழாரம்

மோகன் பாபுவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு இசைக் கச்சேரி நடத்தினார் இசைஞானி இளையராஜா.
இந்த கச்சேரியில் 32 வயலினிஸ்டுகள் பங்கேற்றனர். முன்பதிவு செய்த இசையை துளியும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க தொழில்முறை இசைக் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்ற மிகப் பெரிய கச்சேரியாக இதனை நடத்தினார் ராஜா.
தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ராகவேந்திர ராவ், ஆந்திர முன்னாள் முதல்வர் ஏ ஜனார்தன் ரெட்டி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இசைக்கச்சேரியை முழுவதுமாக இருந்து ரசித்தனர்.
பின்னர் பேசிய மோகன் பாபு, என் படங்களை இசையால் நிறைத்தவர் இசைஞானி இளையராஜா. எனது மூத்த சகோதரர் அவர். இன்று நேற்றல்ல... எனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாள்களிலிருந்தே சகோதரர் இளையராஜாவின் இசை எனக்கு பெரும் துணையாக இருந்து வருகிறது.
இந்த தேசம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது. இந்தியாவின் சிலிர்க்க வைக்கும் பெருமைகளுள் இளையராஜாவும் ஒருவர்..." என்றார்.
இந்த கச்சேரியில், மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை வைத்து ஒரு பாடலை உருவாக்கினார் இளையராஜா. அதனை மோகன் பாபுவின் கல்வி நிறுவனங்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











