ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு!
சென்னை: பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார்.
ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் 'இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்' சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார்.
அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது:
ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்துவிடுவார்கள். கடினமாக உழைக்கிற மக்கள் அவர்கள்.
அந்த மக்களுக்கு இயற்கை தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், தியானம்-பிரார்த்தனை மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.
ஜப்பானிய மக்கள் மிகவும் கட்டுக்கோப்பானவர்கள். கடமை தவறாதவர்கள். அங்கு சுனாமி வந்தபோது, ஒரு ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், பயணிகளிடம் 'நம் நாட்டை சுனாமி தாக்கியிருக்கிறது. என்றாலும் நான் கடமையில் இருந்து தவறமாட்டேன்' என்று கூறி, தொடர்ந்து தனது கடமையை செய்திருக்கிறார்.
இன்னொரு இடத்தில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சுனாமி தாக்கியதும் அவர்கள் சிதறிப் போனார்கள். சுனாமி அடங்கியபின் மீண்டும் அவர்கள் அதே வரிசையில் நின்று பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற கட்டுக்கோப்பும், கடமை உணர்வும்தான் ஜப்பானியர்களின் மிகச் சிறந்த குணம்.
ஜப்பானுக்கு வரும்படி என்னை, அந்த நாட்டின் பிரதமரும், சில முக்கியஸ்தர்களும் அழைத்திருக்கிறார்கள். ஜப்பானிய மக்கள் மீண்டும் சகஜ நிலையை அடைவதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார் ரஜினி.
இந்த கூட்டத்தில், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவக்குமார், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், இரா.செழியன், படஅதிபர்கள் எல்.சுரேஷ், ராம்குமார், எஸ்.தாணு, எடிட்டர் மோகன், புஷ்பாகந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.


Click it and Unblock the Notifications











