இந்திய சினிமா நூற்றாண்டு விழா- ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!
சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை இன்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் அமைச்சர்கள், திரையுலகினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

50 பேருக்கு விருது
இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், நடிகைகள் சரோஜாதேவி, வைஜயந்திமாலா, சாரதா, ஜெயந்தி, குட்டி பத்மினி உள்பட 50 கலைஞர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கினார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர் எல்.சுரேஷ் நன்றி தெரிவித்தார்.

ரஜினி – கமல்
இன்று நடக்கும் கலை நிகழ்ச்சிகளில், ரஜினிகாந்த்-கமல்ஹாசனும் கலந்து கொள்கின்றனர்.
அதைத்தொடர்ந்து நடிகர்-நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நடிகர்கள் அர்ஜுன், மோகன், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், அஜ்மல், நந்தா, ஆனந்த்பாபு, நடிகைகள் தேவயானி, தமன்னா, ஷ்ரேயா, ஹன்சிகா, லட்சுமிராய், பிந்து மாதவி, ஓவியா, துளசி ஆகியோர் நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள்.

சிலம்பரசன்–ஹன்சிகா நடனம்
‘‘நீ வர வேண்டும்...'' என்ற பாடலுக்கும், ‘‘ஓ ரசிக்கும் சீமானே...'' என்ற பாடலுக்கும் சிலம்பரசன்-ஹன்சிகா ஜோடி நடனம் ஆடுகிறார்கள்.
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க, நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற, தங்கப்பதக்கத்தின் மேலே, நாணமோ நாணமோ, ஆடலுடன் பாடலை கேட்டு...ஆகிய எம்.ஜி.ஆர். பட பாடல்களுக்கு கவுதம் கார்த்திக், ஓவியா, துளசி ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.

சந்திரலேகா பாடல்
காதல் மலர் கூட்டம் ஒன்று, பொன்மகள் வந்தாள், யாரடி நீ மோகினி, என்னடீ ராக்கம்மா ஆகிய சிவாஜி பட பாடல்களுக்கு அர்ஜுன், மோகன், அஜ்மல், ரோஜா, தேவயானி, லட்சுமிராய் ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.
புகழ்பெற்ற ‘சந்திரலேகா' படத்தில் இடம்பெற்ற மத்தள பாடலுக்கு ஸ்ரேயா நடனம் ஆடுகிறார். நந்தா, பிந்து மாதவி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.
முத்துக்குளிக்க வாரீகளா என்ற நாகேஷ் பாடலுக்கு அவருடைய மகன் ஆனந்த்பாபு நடனம் ஆடுகிறார்.

குடியரசுத் தலைவர்
22-ந்தேதி கன்னட பட உலகினரின் கலை நிகழ்ச்சிகளும், 23-ந்தேதி மலையாள பட உலகினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 23-ந்தேதி இரவு பட உலகை சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் மிகப்பெரிய விருந்து நடக்கிறது.
24-ந்தேதி நிறைவு விழா நடக்கிறது. அதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

படப்பிடிப்புகள் ரத்து
சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சத்யம், உட்லண்ட்ஸ், அபிராமி, போர் ப்ரேம் ஆகிய தியேட்டர்களில், பொதுமக்களுக்கு பழைய படங்கள் இலவசமாக காட்டப்பட்டு வருகின்றன.
சென்னை கடற்கரை மற்றும் சென்னை நகரில் உள்ள பூங்காக்களிலும் இலவசமாக படங்கள் திரையிட்டு காட்டி வருகிறார்கள். நகரின் முக்கிய பகுதிகள், பூங்காக்களை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











