'கனல்' கண்ணன், நாய்: புது திருப்பம்!
| Click here for more images |
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நாயை சுட்டுக் கொன்றதாக எழுந்துள்ள சர்ச்சையில் புதிய திருப்பமாக, சர்ச்சைக்குரிய நாயின் உடல் மிகவும் அழுகிப் போய் விட்டதால், நாய் எப்படி இறந்தது என்பது குறித்து கண்டறிய முடியவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அருகே உள்ள மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார் கனல் கண்ணன். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் பிரியதர்ஷினி.
சில நாட்களுக்கு முன்பு தான் ஆசையோடு வளர்த்து வந்த தெரு நாய் ஒன்றினை கனல் கண்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக பிரியதர்ஷினி புகார் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரிக்க போலீஸாரும், பிராணிகள் நல சங்கத்தினரும் அங்கு சென்றனர். அங்கு அவர்கள் கண் முன்பாகவே கனல் கண்ணன் குடும்பத்தினரும், பிரியதர்ஷினி குடும்பத்தினரும் மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரித்த போலீஸார், நாயின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நாயின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நாயின் உடல் மிகவும் அழுகி, அதன் உடலில் புழுக்கள் நெளிந்தபடி இருந்தன. இதனால் நாய் சுடப்பட்டு இறந்ததா என்பது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதை பிராணிகள் நலச் சங்கத் தலைவர் ராஜமாணிக்கமும் உறுதி செய்தார்.
இதனால் இந்த வழக்கு என்னாகும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications