twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஹ்மான் இசையில் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டுப் பாடல்!

    By Staff
    |

    A R Rahman
    சென்னை: கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

    தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தப் பாடல் வருமாறு:

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
    பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
    உண்பது நாழி உடுப்பது இரண்டே
    உறைவிடம் என்பது ஒன்றேயென
    உரைத்து வாழ்ந்தோம்
    உழைத்து வாழ்வோம்.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
    நன் மொழியே நம் பொன் மொழியாம்!
    போரைப் புறம் தள்ளி
    பொருளைப் பொதுவாக்கவே
    அமைதி வழிகாட்டும்
    அன்பு மொழி
    அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

    ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
    உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
    ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
    ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
    ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
    சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
    செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

    அகமென்றும் புறமென்றும் வாழ்வை
    அழகாக வகுத்தளித்து
    ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
    ஓதி வளரும் உயிரான உலக மொழி -
    நம் மொழி நம் மொழி - அதுவே
    செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
    வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!


    இந்தப் பாடலுக்கு இசையமைப்பது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார் ஏஆர் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

    கிராமி விருது-யுஸ் கிளம்பினார் ரஹ்மான்:

    இந் நிலையில் அமெரிக்காவி்ல் நடக்கும் கிராமி விருது விழாவில் பங்கேற்க ரஹ்மான் அந் நாட்டுக் கிளம்பிச் சென்றுள்ளார்.

    இசைத் துறையில் மிகவும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது கிராமி. சிறந்த திரைப்பட பாடல்கள் மற்றும் சினிமா அல்லாத இசைக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை நடக்கும் இந்த விழாவில், ஏஆர் ரஹ்மானின் இசையில் உருவான ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் இடம்பெற்ற, ஆஸ்கர் விருது வென்ற ஜெய் ஹோ பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த பாடல் பிரிவுகளில் ஜெய் ஹோ... பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் பாடலுக்கு நிச்சயம் கிராமி விருது கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X