பா.விஜய்யின் ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரி சரியா என்று கேட்ட கலைஞர்... விஜய்க்கு ஆதரவளித்த கவிஞர் வாலி
சென்னை: பாடலாசிரியர், கதாசிரியர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்கிற பன்முகங்களை கொண்டவர் பா.விஜய் அவர்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நெருக்கமாக இருந்த சினிமா கவிஞர்களுள் பா.விஜய் குறிப்பிடத்தக்கவர்.
இந்நிலையில் பா.விஜய் எழுதி தேசிய விருது வென்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலில் உள்ள இலக்கண மீறல் குறித்து கலைஞர் என்னிடம் கேட்டார் என வாலி முன்னதாக கூறியிருக்கிறார்.

கலைஞரும் கவிஞர்களும்
அரசியலைத் தாண்டி சினிமாவில் கதை, வசனம் எழுதக் கூடியதில் வல்லவர் கலைஞர். அதன் காரணமாகவோ என்னவோ கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பா.விஜய் போன்ற பல கவிஞர்கள் அவருடன் நெருங்கி பழகினார்கள். குறிப்பாக பா.விஜய் தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு கலைஞரைதான் தலைமை ஏற்கச் சொல்வார். அதேபோல கலைஞர் அவர்கள் கதை வசனம் எழுதிய இளைஞன் படத்தில் பா.விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார்.

வாலியும் விஜய்யும்
பொதுவாக பாடலாசிரியர்கள் தங்களுக்கென்று ஒரு உதவியாளரை வைத்துக் கொள்வார்கள். ஆனால் கவிஞர் வாலி மறையும்வரை எந்த ஒரு உதவியாளரையும் வைத்துக் கொள்ளவில்லை. காரணம், அப்படி ஒரு உதவியாளர் இருந்தால் பிற்காலத்தில் அந்த நபர் கவிஞர் ஆகும்போது, பல வெற்றிப் பாடல்களை வாலி எழுதவில்லை நான்தான் எழுதினேன் என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நான் எப்போதுமே உதவியாளரை வைத்துக் கொள்வதில்லை. ஆனால், என்னிடம் உதவியாளராக பணிபுரியவில்லை என்றாலும் என்னுடைய கலை வாரிசாக நான் கருதுவது பா.விஜய்யைத்தான் என்று வாலி கூறியிருக்கிறார்.

ஒருமை பன்மை சரியா
ஒருமுறை காமராஜர் அரங்கத்தில் கலைஞர் தலைமையில் தனது புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியிருந்தார் பா.விஜய். அந்தச் சமயத்தில் பா.விஜய் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் மிகப் பெரிய ஹிட்டாகி தேசிய விருதையும் வென்றிருந்தது. அந்தப் பாடலை குறிப்பிட்டு, தன் அருகே அமர்ந்திருந்த வாலியிடம்,"என்னையா வாலி... ஒவ்வொரு பூக்களுமே ஒருமை பன்மையா இருக்கே, இலக்கண மீறல் இல்லையா?" என்பதுபோல் கலைஞர் கேட்டாராம்.
விஜய்க்கு வாலியின் ஆதரவு
அதற்கு,"இருக்கலாம் தப்பில்லண்ணே... ஆயிரம் வாசல் இதயம் என்ற பாடலை கண்ணதாச்சனே எழுதியிருக்கிறார். ஆயிரம் நிலவே வா என்ற பாடல் இருக்கிறது. அதில் ஆயிரம் வாசல்கள் ஆயிரம் நிலவுகள் என்று பன்மையில் எழுதவில்லை. அதனால் ஒவ்வொரு பூக்களுமே என்று எழுதலாம்ணே என்று கலைஞரிடம் விஜய்க்கு ஆதரவாக பேசியதாக வாலி ஒரு பேட்டியில் முன்னதாக கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











