படையப்பா.. முத்தத்தால் மொத்தத்தையும் முடித்த K.S ரவிக்குமார்.. சூப்பர் ஸ்டார் புகுந்து விளையாடுறாரே!
சென்னை: இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் படையப்பா. தமிழ் சினிமா ரசிகர்கள் தொடங்கி, மாற்று மொழி ரசிகர்களுக்கும் பிடித்த படம். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனது அட்டகாசமான இசையால் மொத்த படத்தையும் வேற லெவலுக்கு மாற்றியிருப்பார்.
இந்நிலையில், படையப்பா படத்தில் இடம் பெற்றுள்ள முத்தக் காட்சிகள் மூலம் படத்தில் திரைக்கதை எப்படி நகர்கிறது என்பது குறித்து, எக்ஸ் பக்கத்தில் 'Pixelated Pigeon' என்ற பெயரில் உள்ள இணையவாசி ஒருவர் மிகவும் நேர்த்தியாக விளக்கியுள்ளார். இது பலரும் கவனிக்காத கோணம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் தனது பதிவில், " வழக்கமா தன்னோட சில படங்களில் முத்தத்தை வைத்து அற்புதமான திரைக்கதையை நகர்த்துவார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். அந்த வகையில் "முத்து" படத்தில் முத்தத்தை வைத்து சூப்பர் ஸ்டார் மற்றும் மீனா இடையில் காதலை சொல்லியிருப்பார். அதே போல படையப்பா படத்தில் முத்தத்தை வைத்து எப்படி கதையில் முக்கியத்துவத்தில் சம்பவங்களை உருவாக்கியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

பாம்புக்கு முத்தம்: படத்தின் ஆரம்ப காட்சியில் பாம்புக்கு முத்தம். இங்கு தான் கதையின் முக்கிய புள்ளி தொடங்குகிறது. சூப்பர் ஸ்டார் பாம்புக்கு முத்தம் கொடுத்தது, சௌந்தர்யாவை பொருத்தவரையில், கருணை, அதாவது அவளுக்கு பாம்பு கடவுள். இதனால் பாம்பை தாக்குவதை தாங்கி கொள்ள முடியவில்லை. இதனாலேயே சூப்பர் ஸ்டாருக்கு நன்றி சொன்னாள். ஆனால் ரம்யா கிருஷ்ணனுக்கு, பாம்பு தன்னை போல் விஷம் உடையது. அப்படி பட்ட கொடிய விஷமுடைய பாம்புக்கு ஒருத்தன் முத்தம் கொடுப்பதால், அவளுக்குள் இருக்கும் விஷம் காதலாக உருகுகிறது. இதனால் அந்த காதலை விட்டு கொடுக்க அவள் தயாராக இல்லை. இதனால் நிறைந்த சபையில் ரம்யா கிருஷ்ணன், சூப்பர் ஸ்டாருக்கு முத்தம் கொடுத்தாள். இந்த முத்தத்தால் சௌந்தர்யா தனது காதலை இழக்க நேரிடும் என கவலையானாள்.
ஷாக் முத்தம்: மணிவண்ணன் தனது மகனுக்கு ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்ய நினைத்தது, நிராசையானது. நடிகர் திலகத்திற்கு பல பேர் மத்தியில் மானம் போனது. கதையின் இரண்டாம் பாதியில் மகளின் மேற்படிப்புக்கு சௌந்தர்யா சம்மதிக்காமல் போக, அவரை முத்தத்தால் சம்மதிக்க வைப்பார் சூப்பர் ஸ்டார். அதில் தனது மகளுக்கு எப்படி உதவுவது என நினைத்திருக்கும் போது, மகளே கன்னத்தை தடவி முத்தம் கொடுப்பாள். உடனே சூப்பர் ஸ்டாருக்கு ஐடியா கிடைப்பது போல், எழுந்து சௌந்தர்யாவுக்கு முத்தம் கொடுப்பார். இங்கு சௌவுந்தர்யா அதிர்ச்சியில் இருக்கும் போது, மேற்படிப்புக்கு சம்மதம் தெரிவிப்பார்.

வெறுப்பின் உச்சம்: அதே போல் கதையின் கடைசி பகுதியில் சூப்பர் ஸ்டார் தனது மகளிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கும் போது, மகள் திருமணத்திற்கு ஓகே சொன்னதால் மகிழ்ச்சியில் போனில் முத்தம் கொடுப்பார். அவரை பொறுத்தவரை அது "அன்பு" முத்தம். பாசத்தின் வெளிப்பாடு. ஆனால் அதை பெரும் ரம்யா கிருஷ்ணனுக்கு அது வெறுப்பின் உச்சம். ஏற்கனவே பழிவாங்க துடிக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு இது பூஸ்ட் போல அமைந்தது" என பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இது மட்டும் இல்லாமல், பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











