அந்தப் படம் காட்டிய வழி... தென்னிந்திய சினிமாவில் திடீரென அதிகரிக்கும் வரலாற்று பயோபிக் படங்கள்!
சென்னை: வரலாற்று பயோபிக் படங்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் வரலாற்றுப் படங்கள் உருவாக்கப்படுவது எப்போதாவதுதான் நடக்கும்.
இந்தி சினிமாவில் அவ்வப்போது இதுபோன்ற படங்கள் தயாரிக்கப்படுவது வழக்கம். ராஜமவுலியின் 'பாகுபலி'க்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்
இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் வரலாற்று படங்கள் உருவாவது அதிகரித்து இருக்கிறது. தமிழில், கல்கியின் புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவான பொன்னியின் செல்வனை இயக்கி வருகிறார் மணிரத்னம். இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகி வருகிறது. பாகுபலி போல இந்தப் படத்திலும் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது.

மெகா பட்ஜெட்
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் 2 பாகமாக உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இதை தயாரிக்கிறது. இந்தப் படம் வந்தால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் உருவான வரலாற்றுப் படமாக இருக்கும் என்கிறார்கள்.

'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்
அடுத்து இதே போல மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம், 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்'. 16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. மலையாளம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ்
இதில், குஞ்சலி மரைக்காராக மோகன்லால் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள். இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது இந்தப் படம்.

ராக்லைன் வெங்கடேஷ்
இதே போல கன்னடத்தில் உருவாகும் வரலாற்று பயோபிக் படம், ராஜவீர மடகாரி நாயகா. (Raja Veera Madakari Nayaka). தர்ஷன் நடிக்கும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜேந்திர சிங் பாபு இயக்குகிறார். திவ்யா ஸ்பந்தனா, நயன்தாரா ஹீரோயின்களாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆர்ஆர்ஆர்
தெலுங்கு ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படமும் வரலாற்று பயோபிக் படம்தான். இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படமும் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
Recommended Video

தயாரிப்பாளர் தனஞ்செயன்
இப்படி தென்னிந்திய மொழிகளில் வரலாற்று படங்கள் திடீரென அதிகமாக எடுக்கப்படுவதற்கு பாகுபலி காட்டிய வழிதான் காரணம் என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். அவர் கூறும்போது, 'பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் ரூ.1500 கோடியை வசூலித்துள்ளது. இத்தனை கோடி வசூலித்த இந்திய படம் இதுமட்டுமாகத்தான் இருக்கும். இந்தியில் மட்டும் ரூ.500 கோடியை வசூலித்துள்ளது. அந்த படம் பிசினஸுக்கான ஒரு வழியை காட்டிச் சென்றிருப்பதால், அதை மற்றவர்களும் பின்பற்றுகிறார்கள் என்கிறார்.


Click it and Unblock the Notifications











