இயக்குநர்கள் செய்த தவறான வேலையால் கடுப்பான பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் தாமரை
சென்னை: பொதுவாக ஒவ்வொரு இயக்குநர்களும் பாடலாசிரியர்களுடன் பணி புரிவதில் வெவ்வேறு பாணியை கையாள்வார்கள்.
சில இயக்குநர்கள் தங்கள் படத்தில் ஐந்து பாடல்கள் இருந்தால் ஐந்து பாடல் ஆசிரியர்களிடம் எழுதக் கொடுப்பார்கள்.
இன்னும் சிலர் ஐந்து பாடல்களையும் ஒரே பாடலாசிரியரிடம் கொடுத்து பாடல்களை வாங்குவார்கள்.

இயக்குநர் - இசையமைப்பாளர் - பாடலாசிரியர்
சில இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்ற மூவர் கூட்டணி பல ஆண்டுகள் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக பயணம் செய்த சம்பவங்களும் தமிழ் திரையுலகில் உண்டு. ரோஜா திரைப்படத்திலிருந்து செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வரையில் இயக்குநர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கவிஞர் வைரமுத்து கூட்டணி தொடர்ந்து பணியாற்றியனர். அதேபோல கௌதம் வாசுதேவனின், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தாமரை கூட்டணியும் பொன்ராம், டி.இமான் மற்றும் யுகபாரதி கூட்டணியும் சில படங்களில் ஒன்றாக பணிபுரிந்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்கள்.

யுகபாரதி
இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதியின் கூட்டணி தற்சமயம் உச்சத்தில் இருக்கும் ஒரு கூட்டணி. உன் மேல ஒரு கண்ணு, ஆவி பறக்கும் டீக்கடை, பாக்காத பாக்காத, ஊதா கலரு ரிப்பன் என மிகவும் எளிமையான சொற்களைப் பயன்படுத்தி வரிகளை கையாள்பவர் யுகபாரதி. அதன் மூலம் மக்களிடம் ஈசியாக சென்றடையும் பாடல்களை இருவரும் கொடுத்துள்ளார். இதே போலத்தான் பிரபு சாலமன் படங்களுக்கும் இந்தக் கூட்டணி பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளது.

தாமரை
வசீகரா பாடலில் துவங்கி கௌதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தாமரை கூட்டணியும் பல படங்களில் தொடர்ந்து வெற்றிப் பாடல்களை கொடுத்தனர். கவித்துவமான எளிமையான சொற்களைப் பயன்படுத்தி பாடல்கள் எழுதுவதில் தாமரை வல்லவர். நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன்தினம் பார்த்தேனே, அனல் மேலே பனித்துளி போன்ற பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இயக்குநர்கள் செயல்
இவ்வாறு ஒரே பாடலாசிரியரை நம்பி பாடல்களை கொடுக்கும் இயக்குநர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரே டியூனை மூன்று நான்கு பாடலாசிரியர்களிடம் கொடுத்து அவர்கள் எழுதும் வரிகளில் சிறந்த வரிகளை கோர்த்து இயக்குனர்கள் ஒரு பாடலை உருவாக்குவார்களாம். ஆரம்ப காலகட்டத்தில் இயக்குநர் விக்ரமன் படங்களில் அது போல நடக்கும் என்றும் மௌனம் பேசியதே திரைப்படத்தில் ஒரு டியூனை தனக்கும் பாடலாசிரியர் தாமரைக்கும் கொடுத்ததாகவும். இருவருமே அந்த டியூனை திரும்ப கொடுத்துவிட்டு பாடல் எழுத மறுத்துவிட்டதாக யுகபாரதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











