Real Estate Scam: நில மோசடி புகாரில் மகேஷ் பாபு.. நோட்டீஸ் அனுப்பிய நுகர்வோர் ஆணையம்!
சென்னை: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு சினிமா உலகில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் முக்கிய நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படத்தை எஸ்.எஸ். ராஜமௌலி இயக்குகிறார். அந்த படத்திற்கான ப்ரீ புரெடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நுகர்வோர் ஆணையத்தில் இருந்து மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இதனால் அவர் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அமலாக்கத்துறை சார்பில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதாவது, சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட பண மோசடி விவகாரம் தொடர்பாக அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்துடன் அவர் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகேஷ் பாபு ரூபாய் 5.9 கோடிகள் பெற்றதாக கூறப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல், இதில் பணம் என்பது ஒரு பகுதி தான் எனவும், மகேஷ் பாபுவுக்கு பணம் மட்டும் இல்லாமல் பொருளாகவோ, அசையும் அல்லது அசையா சொத்தாக ஏதாவது கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

விளம்பரத்தால் வந்த சிக்கல்: சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் மீதான அமலாக்கத்துறையினர் விசாரணை என்பது சுமார் ரூபாய் 100 கோடிகள் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு என கூறப்படுகிறது. இந்த மோசடி வழக்கில் மகேஷ் பாபுவின் பெயர் இடம் பெறக் காரணமே, அவர், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்தின் விளம்பரங்களில் நடித்ததுதான். மகேஷ் பாபு இதில் நேரடிக் குற்றவாளி இல்லை என்றாகும், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்தின் விளம்பரதில் நடித்ததற்காக அவர் பெற்ற சம்பளம், அதை அவர் எவ்வாறு பெற்றுக் கொண்டார், அவை முறையாக கொடுக்கப்பட்டதா? சட்டவிரோத பண பரிமாற்றங்கள் செய்யப்பட்டதா என்ற விசாரணையின் கீழ் தான் மகேஷ் பாபு இப்போது உள்ளார்.
நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்: இந்நிலையில் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில், மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, மகேஷ் பாபு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்தின் விளம்பரங்களில் பயன்படுத்திய பெயர்களில் இல்லாத ஒரு இடத்தின் பெயரையும் சொல்லி உள்ளார். இதனால் அதனை நம்பிக் கொண்டு முதலீடு செய்ததில் ரூபாய் 34.8 லட்சம் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அந்த மருத்துவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் மகேஷ் பாபுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. நுகர்வோர் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ்க்கு பதில் அளிக்க மகேஷ் பாபு நுகர்வோர் ஆணையத்திற்கு நேரில் ஆஜராக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











