இளையராஜாக்கு மட்டுமல்ல.. தமிழ் சினிமாவில் இன்னொரு செலிபிரிட்டிக்கும் இன்னைக்கு ஹேப்பி பர்த்டே!
இயக்குநர் மணிரத்னத்தின் 63வது பிறந்தநாள் இன்று.
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் மணிரத்னம். காதல், தேச பக்தி என அனைத்துக் களங்களிலும் வெற்றிப் படங்களைக் கொடுக்கும் வித்தகர்.
வசந்த், கௌதம் வாசுதேவ் மேனன், ஏஆர் முருகதாஸ், செல்வராகவன் தொடங்கி, கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன் என பல முன்னணி இயக்குநர்களின் ரோல்மாடலாக விளங்கி வரும் மணிரத்னம் இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கலைக்குடும்பம்:
மதுரையில் 1956-ம் ஆண்டு பிறந்த மணிரத்னத்திற்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர் கோபால ரத்னம் சுப்பிரமணி ஆகும். மணிரத்னத்தின் குடும்பமே கலைக்குடும்பம் தான். அவரது தந்தை கோபால ரத்னம் திரைப்படத் தயாரிப்பாளர், அண்ணன் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்.

போரடித்த வேலை:
ஆனால், 1980களில் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காமல், நேரடியாக இயக்குனர் ஆனவர் என்ற பெருமைக்குரியவர் தான் மணிரத்னம். எம்பிஏ படித்து விட்டு மும்பையில் கன்சல்டண்டாக வேலை பார்த்து வந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் வேலை போரடித்துப் போகவே, சினிமா பக்கம் அவரது கவனம் திரும்பிய்து.

முதல்படத்திலேயே விருது:
மணிரத்னத்தின் முதல் படம் கன்னடத்தில் வெளியான பல்லவி அனுபல்லவி. வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், இப்படம் கர்நாடக மாநிலத்தின் அந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருதை வென்றது.

நிர்ப்பந்தம்:
அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லாலின் படம் ஒன்றை இயக்கினார் மணிரத்னம். ஆனால், அப்படமும் சொல்லிக் கொள்ளும் வெற்றியைத் தரவில்லை அதன் பிறகு தமிழில் உணவு மற்றும் பகல் நிலவு படத்தை இயக்கினார். இவையும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இதனால், சினிமாத் துறையை விட்டே அவர் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தொடர் வெற்றி:
ஆனாலும், பின்வாங்க விரும்பவில்லை மணிரத்னம். அவரது நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாக 1986ம் ஆண்டு ரிலீசான மௌனராகம் அமைந்தது. அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் இன்றளவும் தொடர்கிறது. இடையில் சிலபல சறுக்கல்கள் அமைந்தாலும், தன் வித்தியாசமான கதைக்களங்களால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.

பாடல்கள்
1987-ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘நாயகன்' திரைப்படம், உலக அளவில் சிறந்த 100 படங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது படங்களில் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் பாடல்களும் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின.

செக்கச் சிவந்த வானம்:
சுருக்கமான ஆழமான வசனங்கள் மூலம் மக்களை வியப்பில் ஆழ்த்துவது மணிரத்னத்தின் ஸ்டைல். 6 முறை தேசிய விருதும்,9 முறை தென்னிந்திய மற்றும் வட இந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ள மணிரத்னம், சர்வதேச திரைப்பட விழாக்களில் 12 விருதுகளுக்கு மேல் வென்றுள்ளார். பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். தற்போது விஜய்சேதுபதி, சிம்பு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











