பேருந்தில் பிறந்த கவியரசர் கண்ணதாசன்: ஒரு பிளாஷ்பேக்
சென்னை: காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள் இன்று.
17 வயதில் எழுதத் துவங்கியவர் கவியரசர் கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 8வது பிள்ளையாக பிறந்தவர் முத்தையா. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
8வது பிள்ளையாக பிறந்த அவர் 8ம் வகுப்பு வரையே படித்தார். ஆரம்ப காலத்தில் பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதி வந்த கண்ணதாசன் மாடர்ன் தியேட்டர்ஸார் மூலம் சினிமா உலகிற்கு வந்தார்.

இயக்குனர் ராம்நாத்தின் கன்னியின் காதலி படத்தில் கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்பது தான் கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் ஆகும்.
திருமகள் பத்திரிகைக்கு பேருந்தில் செல்லும்போது தம்மை முத்தையா என்றா அறிமுகம் செய்வது என அவர் யோசித்தார். கண்ணன் 8வது பிள்ளையாக பிறந்தார் நானும் எட்டாவது அதனால் கண்ணன் என்ற பெயரை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார் முத்தையா.
வெறும் கண்ணன் நன்றாக இல்லையே என்று நினைத்த அவர் தாசனை சேர்த்து கண்ணதாசன் ஆனார். பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போதே முத்தையா கண்ணதாசன் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











