ஷூ, செருப்பிற்காக கூட எனக்கும் அண்ணனுக்கும் சண்டை வரும்... கார்த்தி நினைவலைகள்
சென்னை: இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு இடையே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தினுடைய ரிலீசுக்கு பிறகும் அந்தப் படம் பற்றிய பல புரமோஷனல் வீடியோக்கள் இணையதளத்தில் வலம் வருகின்றன.
விர்மன் திரைப்படம் குடும்பம் சம்பந்தப்பட்ட படம் என்பதாலையோ என்னவோ தன்னுடைய அண்ணன் பற்றி அனைத்து பேட்டிகளிலும் குறிப்பிட்டு வருகிறார் கார்த்தி.

அண்ணன் தம்பி
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவினுடைய தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள படம் தான் விருமன். வழக்கமாக உறவுகளை மையப்படுத்தி கிராமக் கதைகளை கையாளும் முத்தையா இந்தப் படத்திலும் அதையேதான் செய்துள்ளார். கொம்பன் திரைப்படம் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும் திரையரங்குகளில் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு இன்னொரு காரணம் அதிதி சங்கர் என்று கூட சொல்லலாம்.

சிறு வயதில் சண்டை
சின்ன வயதில் அனைத்து அண்ணன் தம்பிகள் போலவே தானும் சூர்யாவும் சண்டை போட்டுக் கொள்வோம் என்றும் சட்டை, ஷூ, பைக் என்று எதை எடுத்தாலும் இருவருக்குள்ளும் சண்டை வரும் என்றும் இருவரையும் ஒன்றாக தங்க வைக்க வீட்டில் பயப்படுவார்கள் என்றும் சூர்யாதான் எப்பவுமே தன்னை அடிப்பார் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார். வீட்டில் மட்டுமல்லாமல் பள்ளிக்குச் சென்றாலும் ஸ்டூடண்ட்ஸ் ஹெட் பொறுப்பில் இருந்ததால் சூர்யா அங்கும் கார்த்தியை முட்டி போட வைப்பாராம்.

நந்தா அனுபவம்
இப்படி சின்ன வயதிலிருந்தே சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கிடையே கார்த்தி வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றதும் ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டதாம். அப்போது படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியவர் வீட்டில் கூட தங்காமல் நந்தா படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்த சூர்யாவை பார்ப்பதற்கு உடனே கிளம்பி சென்று விட்டாராம் கார்த்தி. முதன்முதலில் அப்போதுதான் இனம் புரியாத பாசம் சூர்யா மீது ஏற்பட்டதாக கார்த்தி கூறியுள்ளார். சூர்யா தங்கியிருந்த அறைக்குச் சென்று கதவை தட்டியதும் கருப்பாக அரை மொட்டை தலையுடன் ஒரு நபர் கதவை திறக்க, அது சூர்யாதான் என்று தெரியாமல் அவரிடமே அண்ணன் இல்லையா என்று கேட்டாராம் கார்த்தி.

ராமன் லக்ஷ்மன்
இப்போது திரைத்துறையில் அண்ணன் தம்பி எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாகவே இருவரும் இருக்கின்றார்கள். ராமன் முன்னே சென்றால் லட்சுமணன் பின்னேதான் செல்ல வேண்டும். அதை போல் அண்ணன் தான் முன்னாடி செல்ல வேண்டும் அவர் பின்னேதான் நான் வருவேன் என்று கூறியுள்ளார் உறவுகளுக்கு மிகவும் முக்கியம் கொடுக்கும் நடிகர் கார்த்தி.


Click it and Unblock the Notifications











