ஷாருக்கான், அஜித், ஜெயம் ரவி.. அடுத்தடுத்த பெரிய படங்கள்.. நயன்தாராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியாவிலேயே இந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி உள்ளார்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 62 படம் மற்றும் ஜெயம் ரவியின் படம் என அடுத்தடுத்து 3 பெரிய படங்களில் கமிட் ஆகி உள்ளார்.
சோலோவாக நடித்த நெற்றிக்கண் படம் சொதப்பிய நிலையில், பெரிய நடிகர்களுடன் நடித்து கல்லா கட்டி விட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளாராம் நயன்தாரா.

சொந்த கம்பெனி படம்
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தி வரும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விரைவில் அந்த படத்திற்கான புரமோஷன் வேலைகளை நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் ஆரம்பிக்க உள்ளனர்.

ஏகே 62
நடிகர் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். எச். வினோத் உடன் 3வது படமான ஏகே 61 படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், விரைவில் அந்த படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாக உள்ள ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார்.

நயன்தாரா சம்பளம்
பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என நடிகர் அஜித்துடன் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா மீண்டும் அவருடன் ஏகே 62 படத்தில் இணைந்து நடிக்க போகிறார். அந்த படம் லைகாவிற்கு கிடைப்பதற்கே நயன்தாரா தான் காரணம் என்கின்றனர். நடிகர் அஜித்துக்கு 105 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவுக்கு 10 கோடி ரூபாய், விக்னேஷ் சிவனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷாருக்கான் படத்தில்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் இந்தி படத்தில் இணைந்துள்ள நயன்தாராவுக்கு அதிக பட்சமாக 10 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அந்த படம் குறித்து ஷாருக்கான் ட்வீட் போட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங்கிற்காக நயன்தாரா அடிக்கடி மும்பை பறந்து வருகிறார்.

சிரஞ்சீவி படம்
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் டோலிவுட்டில் உருவாகி வரும் சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் நயன்தாராவுக்கு ஹீரோயின் ரோல் இல்லை. மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் லூசிஃபர் படத்தில் மஞ்சு வாரியர் நடித்த ரோல் தான் என்கின்றனர். அந்த படத்திற்கு 7 முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி படத்திற்கு
இந்நிலையில், இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போகும் புதிய படத்தில் நயன்தாரா ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த ஹிட் ஜோடியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வெறும் 20 நாள் கால்ஷீட்டுக்கு நடிகை நயன்தாராவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. நயன்தாராவின் ஒரு நாள் கால்ஷீட் 50 லட்சம் ரூபாயாக உள்ளது.

நயன்தாரா தான் நம்பர் ஒன்
தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்திய அளவில் பல முன்னணி நடிகைகளே ஒட்டுமொத்த படத்துக்கும் ஒன்று முதல் இரண்டு கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகின்றனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு இணையாக நயன்தாராவின் சம்பளம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஆண்டு கணக்கில் பார்த்தால் தீபிகா படுகோனை விட அதிக படங்களில் நடித்து 50 முதல் 70 கோடி ரூபாய் வரை சினிமா மற்றும் விளம்பரங்கள் மூலமாக நயன்தாரா சம்பாதித்து நம்பர் ஒன் இடத்தில் உள்ளாராம். இது தவிர டீ கடை பிசினஸ், தயாரிப்பு நிறுவனம் என ஏகப்பட்ட வருமானங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











