twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை 21: அத்தனை நாயகிகளுக்கும் ஹீரோ!

    |

    - பெரு துளசிபழனிவேல்

    நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனை ஆரம்ப நாட்களில் சினிமாவுக்குப் பொருத்தமில்லாத நடிகராக பார்த்தார்கள். அவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கும், இயக்குவதற்கும் தயங்கினார்கள். அவருடன் இணைந்து நடிப்பதற்கும் யோசித்தார்கள்.

    இந்தச் சூழ்நிலையில்தான் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் 'பராசக்தி' (1952) படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கதாநயாகனாக நடிக்க வைத்து ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படத்தைத் தயாரித்தார். கலைஞர் மு.கருணாநிதி பரபரப்பூட்டும் வகையில் வசனத்தை எழுதியிருந்தார். படம் சூப்பர் ஹிட்டாகி தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. நடிகர் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பு, அவர் ஏற்ற இறக்கத்துடன் வசனத்தை உச்சசரித்த அழகு படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது.

    படத்தின் இறுதி காட்சியில் அமைககப்பட்டருந்த கோர்ட் சீன், அதில் சிவாஜியால் பரபரப்புடன் பேசப்பட்ட வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
    அதன்பிறகு சிவாஜியை நடிக்க வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் முன் வந்தார்கள். பராசக்திக்குப் பிறகு அவருடன் இணைந்து ஜோடியாக நடிப்பதற்கு பல கதாநாயகிகள் ஆசைப்பட்டடார்கள். அப்படி சிவாஜியுடன் இணைந்து நடித்த அத்தனை நடிகையர்களும் சிவாஜியின் திரையுலக வரலாற்றில் இடம் பெற்றவர்களாகவும், தமிழ் சினிமா வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

    முதல் நாயகி பண்டரிபாய்

    நடிகர் திலகம் நடித்து அறிமுகமான முதல் படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் சிவாஜிக்கு முதல் ஜோடியாக இணைந்து நடித்தவர் பண்டரிபாய். இவர் ஏற்கனவே எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியவர்.
    ஏவிஎம் நிறுவனம் அடுத்து தயாரித்த 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகம் செய்யும் தனது கணவன் சிவாஜியை சுட்டுத் தள்ளும் துணிச்சலான வேடத்தில் நடித்தார். 'அன்னையின் ஆணை', 'ராஜபக்தி'யிலும் ஜோடியாக நடித்தார். 'தெய்வமகன்' படத்தில் தாரமாகவும், தாயாகவும் நடித்தார். 'கௌரவம்' படத்தில் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாகவும், அவரது மகன் இளம் வழக்கறிஞராகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பண்டரிபாய் நடித்தார். இளம் வழக்கறிஞருக்கு ஜோடியாக உஷா நந்தினி நடித்தார்.

    Nenjam Marappathillai - 21

    பத்மினி

    அடுத்து நாட்டியப் பேரொளி பத்மினி இவர் முதன் முதலாக கலைவாணர் என்.எஸ்.கே. தயாரித்து இயக்கிய 'பணம்' படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 'அன்பு', 'இல்லறஜோதி' யில் இணைந்து நடித்தார். 'கல்யாண பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் காமெடி கலந்த வேடம். 'எதிர்பாராதது' படத்தில் காதலியாகவும், சித்தியாகவும் இருமாறுபட்ட தோற்றங்கள். 'தூக்குதூக்கி', 'காவேரி', ' கோட்டீஸ்வரன்', 'ராஜாராணி' படங்களில் ஜோடியாக நடித்தவர் 'தானே உனக்காக' படத்தில் கௌரவ வேடத்தில் வந்தார். ஆனால் சிவாஜி ஜோடியாக. 'அமரதீபம்', 'புதையல்', 'பாக்கியவதி', 'உத்தபுத்திரன்', 'தங்கப்பதுமை' படங்களிலும் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

    'மரகதம்', 'தெய்வப் பிறவி', 'புனர் ஜென்மம்', 'ஸ்ரீவள்ளி', 'செந்தாமரை', 'நான் வணங்கும் தெய்வம்', 'பேசும் தெய்வம்', 'பாலாடை' போன்ற படங்களிலும் இணைந்து நடித்து தனது, நடிப்பாற்றைலை வெளிப்படுத்தினார். 'திருவருட்செல்வர், 'இருமலர்கள்', 'திருமால்பெருமை', 'விளையாட்டுப்பிள்ளை', 'இருதுருவம்', 'தேனும் பாலும்' போன்ற படங்களிலும் சிறப்பாக நடித்தார். 'தில்லானா மோகனாம்பாள்', 'வியட்நாம்வீடு', 'தாய்க்கு ஒரு தாலாட்டு', 'லட்சுமி வந்தாச்சு' போன்ற படங்களில் நடித்து சிவாஜிகணேசனுக்கு சிறப்பான ஜோடி எனப் பெயர் பெற்றார்.

    இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் தாய்க்கு ஒரு தாலாட்டு.

    சாவித்திரி

    அடுத்து நடிகர் திலகத்தின் ஜோடியாக வந்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. 'அமரதீபம்', 'வணங்காமூடி', 'அன்னையின் ஆணை', 'காத்தவராயன்', 'குறவஞ்சி', 'எல்லாம் உனக்காக', 'வடிவுக்கு வளைகாப்பு', 'இரத்தத் திலகம்', 'திருவிளையாடல்' போன்ற படங்களோடு 'பிராப்தம்' படத்தை இயக்கி நடித்து தயாரித்தார். அவர் நடித்த அத்தனை படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்ற நடிகையர் திலகம் சாவித்ரி. 'கை கொடுத்த தெய்வம்' படத்தில் வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் வெளுத்து வாங்கினார். 'நவராத்திரி'யில் ஒன்பது விதமான வேடத்தில் நடித்த சிவாஜிக்கே சவால் விடுகின்ற அளவிற்கு அவரது நடிப்பாற்றல் சிறந்து விளங்கிறது. 'நவராத்திரி' சிவாஜி நடித்த 100வது படம் என்றாலும் 'சாவித்திரியின் நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்திய முதன்மையான படமாகும்.

    சிவாஜி - சாவித்திரிக்கு மகுடம் சூட்டிய படம் பாசமலர். இருவரும் இதில் ஜோடியல்ல. அண்ணன் - தங்கையாக வாழ்ந்திருந்தார்கள்.

    அஞ்சலிதேவி

    அஞ்சலிதேவி 'முதல் தேதி', 'நான் சொல்லும் ரகசியம்' என்ற இரண்டே படங்களில் மட்டும் ஜோடியாகக நடித்தார். இவரது அஞ்சலி பிக்சர்ஸ் தயாரித்த 'பூங்கோதை' படத்தில் நடிகர் திலகம் நாயகனாக நடித்தார்.

    எம்.என். ராஜம்

    சிவாஜியின் ஆரம்பகால படங்களான 'மங்கையர் திலகம்', 'நல்லவீடு', 'நானே ராஜா', 'பெண்ணின் பெருமை' 'ரங்கோன் ராதா', 'பதிபக்தி', 'பாசமலர்' போன்ற படங்களில் சிறப்பாக நடித்தவர் எம்என் ராஜம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளர் சிவாஜியை காதலிக்கும் ரசிகையாக அழுத்தமாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றார்.

    பி பானுமதி

    நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவினால் போற்றப்பட்ட பி.பானுமதி நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தார். கல்கியின் நாவலான கள்வனின் காதலி பேரறிஞர் அண்ணாவின் நாவலான 'ரங்கோன் ராதா', வட்டார மொழியில் எடுக்கப்பட்ட 'மக்களைப் பெற்ற மகராசி', 'மணமகன் தேவை', 'அம்பிகாபதி', 'அறிவாளி' போன்ற அனைத்துப் படங்களிலும் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு இணையாகவே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்பதை அனைவருக்கும் உணர வைத்தார்.

    கிரிஜா

    'திரும்பிப்பார்', 'மனோகரா' இரண்டே படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை கிரிஜா. அதன் பிறகு அவர் சிவாஜியுடன் எந்தப் படத்தில் காணமுடியவில்லை.

    சௌகார் ஜானகி

    நடிகர் திலகத்துடன் ஜோடியாக மட்டுமல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் சௌகார் ஜானகி. இவர் நடிகர் திலகத்துடன் 'படிக்காத மேதை', 'பாவை விளக்கு', 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'பச்சை விளக்கு', 'புதிய பறவை', 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'மகாகவி காளிதாஸ்', 'திருமால் பெருமை', 'எங்க ஊர் ராஜா', 'உயர்ந்த மனிதன்', 'மனிதனும் தெய்வமாகலாம்', 'பட்டாக்கத்தி பைரவன்' போன்ற பல படங்களிலும் காதலியாக மட்டும் வந்து போகாமல் சிவாஜியின் மனைவியாகவே நேரிடையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிவாஜியை மட்டுமல்லாமல் படம் பார்த்தவர்களையே வியக்க வைத்தவர் நடிகை சௌகார் ஜானகி. குறிப்பாக புதிய பறவை படத்தில் கலக்கினார்.

    Nenjam Marappathillai - 21

    சரோஜா தேவி

    எம்ஜிஆருக்கு மட்டுமல்ல, சிவாஜிக்கும் பொருத்தமான ஜோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் அபிநய சரஸ்வதி எனப் புகழப்பட்ட சரோஜா தேவி.

    அஞ்சல் பெட்டி 520, அன்பளிப்பு, பாலும் பழமும், பாகப்பிரிவினை, இருவர் உள்ளம், புதிய பறவை, கடைசியாக ஒன்ஸ்மோர் என பல படங்களில் இந்த ஜோடி ரசிகர்களைக் கவர்ந்தது.

    இவர்களைத் தவிர 'கண்கள்', 'குறவஞ்சி போன்ற படங்களில் மைனாவதி, 'பூங்கோதை' படத்தில் புதுமுகம் வசந்தா, 'மனிதனும் மிருகமும்' படத்தில் மாதுரி தேவி, 'திரும்பிபார்', 'துளிவிஷம்' படத்தில் கிருஷ்ணகுமாரி, 'இல்லற ஜோதி'யில் ஸ்ரீ ரஞ்சனி நடித்தார், 'காவேரி', உலகம் பலவிதம்', 'தூக்கு துூக்கி' படங்களில் லலிதா, 'கூண்டுக்கிளி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாகவும், சிவாஜி காதலித்த பெண்ணாகவும் பி.எஸ். சரோஜா, 'நான்பெற்ற செல்வம்', 'ஹரிச்சந்திரா', 'வாழ்விலே ஒருநாள்' போன்ற படங்களில் ஜி.வரலட்சுமி, 'தெனாலிராமன்', 'தங்கமலை ரகசியம்', 'பொம்மைக் கல்யாணம்', 'நிச்சயத்தாம்பூலம்', 'மருதநாட்டுவீரன்' போன்ற படங்களில் ஜமுனா, 'ராஜாராணி', 'ராணி லலிதாங்கி', 'சாரங்கதாரா', 'படித்தால் மட்டும் போதுமா' போன்ற படங்களில் ராஜ சுலோச்சனா, 'சபாஷ்மீனா' படத்தில் மாலினி போன்றோர் நடித்தனர்.

    கலையுலகின் கனவுக் கன்னியாக விளங்கிய டி.ஆர். ராஜகுமாரி 'தங்கப்பதுமை' படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.

    'வீரப்பாண்டிய கட்டபொம்மன்' படத்தில் எஸ்.வரலட்சுமியும், 'இரும்புத்திரை', 'சித்தூர் ராணிபத்மினி' படங்களில் நடிகை வைஜயந்திமாலாவும், 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் குமாரி ருக்மணியும், 'பாவைவிளக்கு' படத்தில் இன்னொரு நாயகியாக குமாரி கமலா, 'பலே பாண்டியா', ஆண்டவன் கட்டளை படங்களில் தேவிகா ஜோடியாக நடித்தனர்.

    'பந்தபாசம்' படத்தில் சந்திரகாந்த்தா நடித்தார். 'குங்குமம்' படத்தில் சாரதா, விஜயகுமாரி நடித்தார்கள். 'சாந்தி' படத்தில் தேவிகா, விஜயகுமாரி நடித்தார்கள். 'நீலவானம்' படத்தில் தேவிகா, ராஜஸ்ரீ நடித்தார்கள்.

    'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் மற்றொரு ஜோடியாக மணிமாலா நடித்தார். 'பாபு' படத்தில் விஜயஸ்ரீயும், 'ஞானஒளி' படத்தில் விஜய நிர்மலாவும் நடித்தனர்.

    'சிவந்தமண்', 'தங்கை' படங்களில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா.

    சிவாஜியின் ஸ்பெஷல் ஜோடி உஷா நந்தினி. 'பெண்ணுஞ்சல்', 'கௌரவம்', ராஜபார்ட் ரங்கதுரை','மனிதனும் தெய்வமகலாம்', 'என்னைப்போல் ஒருவன்' போன்ற படங்களில் இவர் நடித்தார்.

    'உனக்காக நான்', 'தியாகம்', ராஜரிஷி', 'ராஜராஜசோழன்', 'ஆனந்தகண்ணீர்', 'நெஞ்சங்கள்', 'குடும்பம் ஒரு கோயில்', 'படையப்பா' போன்ற படங்களில் லட்சுமி ஜோடியாக நடித்தார்.

    வாணிஸ்ரீ

    வாணிஸ்ரீ - சிவாஜி ஜோடி எழுபதுகளில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி.
    வசந்த மாளிகையில் இருவரின் கெமிஸ்ட்ரியும் இப்போது நரை திரை கண்ட மூத்த இளைஞர்களாலும் மறக்க முடியாதது.

    'சிவகாமியின் செல்வன்', 'வாணி ராணி', 'ரோஜாவின் ராஜா', ' இளைய தலைமுறை', 'புண்ணிய பூமி', 'நல்லதொரு குடும்பம்', 'நிறைகுடம்', 'உயர்ந்த மனிதன்' என அத்தனைப் படங்களில் முத்திரைப் பதித்த ஜோடி இது.

    கேஆர் விஜயா

    புன்னகை அரசி கே ஆர் விஜயா, நடிகர் திலகத்துடன் முதன்முதலாக ஜோடியாக இணைந்து நடித்த படம் 'செல்வம்'. தொடர்ந்து 'நெஞ்சிருக்கும் வரை', 'தங்கை', 'பாலாடை', ' திருவருட்செல்வர்', 'இருமலர்கள்', 'ஊட்டிவரை உறவு', ' திருடன்', ' எதிரொலி', ' ராமன் எத்தனைராமனடி', ' சொர்க்கம்', ' தவப்புதல்வன்', 'பாரதவிலாஸ்' 'கிரகப்பிரவேசம்', 'நாம்பிறந்த மண்', 'ஜெனரல் சக்கரவர்த்தி', 'ஜஸ்டிஸ் கோபிநாத்', 'நான்வாழவைப்பேன்', ' ரிஷிமூலம்', 'தர்மராஜா', 'சத்தியசுந்தரம்', 'கல்தூண்', 'ஹிட்லர் உமாநாத்', ' ஊருக்கு ஒரு பிள்ளை', 'ஊரும் உறவும்', 'நீதிபதி', 'மிருதங்க சக்கரவர்த்தி', 'தராசு', 'சிம்ம சொப்பனம்', ' சாதனை', 'கிருஷ்ணன் வந்தான்', 'திரிசூலம்' போன்ற அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்து பத்மினிக்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பொருத்தமான ஜோடி என்று அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றவர் கே.ஆர். விஜயா.

    Nenjam Marappathillai - 21

    ஜெயலலிதா

    புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் தமிழ் சினிமாவில் பெரிய இடம் பெற்ற இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் சிவாஜி கணேசனின் பிரபல நாயகிகளுள் ஒருவர். கலாட்டா கல்யாணம் படத்தில்தான் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். தொடர்ந்து, குருதட்சணை, தெய்வமகன், ராஜா, தர்மம் எங்கே, நீதி, தாய், அன்பைத் தேடி, சித்ரா பௌர்ணமி, சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டிணமா, எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் சிவாஜின் ராசியான ஜோடியாக பேசப்பட்டார்.

    மஞ்சுளா

    எம்ஜிஆரால் அறிமுகம் செய்யப்பட்ட மஞ்சுளா, சிவாஜிக்கும் ஏழெட்டு படங்களில் ஜோடி போட்டு சிறந்த நடிகையாகத் திகழ்ந்தார்.

    'எங்கள் தங்க ராஜா', 'என்மகன்', ' அவன்தான் மனிதன்', 'அன்பே ஆருயிரே', 'டாக்டர்சிவா', 'உத்தமன்', 'சத்தியம்' ஆகிய படங்களில் மஞ்சுளாவும் சிவாஜியும் ஜோடி சேர்ந்தனர்.

    'சிவகாமியின் செல்வன்' படத்தில் இரண்டாவது சிவாஜிக்கு ஜோடியாக நடிகை லதா நடித்தார்.

    கேஆர் விஜயாவுக்குப் பிறகு சிவாஜிக்கு பாந்தமான ஜோடியாகப் பேசப்பட்டவர் சுஜாதா. 'அண்ணன் ஒரு கோயில்', 'அந்தமான் காதலி', 'வா கண்ணா வா', 'கருடா சௌக்கியமா', 'தீர்ப்பு', பரீட்சைக்கு நேரமாச்சு', 'சந்திப்பு', 'சுமங்கலி', ' திருப்பம்', 'நேர்மை', ' மண்ணுக்குள் வைரம்' போன்ற படங்களில் ஜோடியாக நடித்து சிறப்புச் சேர்த்தார்.

    'கவரிமான்' படத்தில் துரோகம் செய்யும் மனைவியாக நடிகை பிரமிளா துணிச்சலாக நடித்தார்.

    'மோகனப் புன்னகை' படத்தில் ஜெயபாரதி, அனுராதா, பத்மப்பிரியா இணைந்து நடித்தார்கள். 'வைரநெஞ்சம்' படத்தில் பத்மப்பிரியா ஜோடியாக நடித்தார்.

    ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா

    அன்றைய நாட்களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி 'விஸ்வரூபம்', 'சந்திப்பு' படங்களிலும், ஸ்ரீப்ரியா த்ரிசூலம், வசந்தத்தில் ஓர் நாள், 'வெற்றிக்கு ஒருவன்', 'எமனுக்கு எமன்', 'ரத்தபாசம்', 'அமரகாவியம்', 'லாரி டிரைவர்', ராஜாக்கண்ணு', 'மாடிவீட்டு ஏழை', ஊருக்கு ஒரு பிள்ளை', 'சங்கிலி', நட்சத்திரம் போன்ற படங்களில் சிவாஜியின் ஜோடியாக நடித்தனர்.

    Nenjam Marappathillai - 21

    அம்பிகா - ராதா

    எண்பதுகளில் வெற்றி நாயகிகளாகத் திகழ்ந்த அம்பிகாவும் ராதாவும் கூட சிவாஜியுடன் ஜோடி சேர்ந்து அவருக்கு இணையாக நடித்தனர்.

    அம்பிகா வாழ்க்கை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். முதல் மரியாதை படத்தில் ராதாவின் நடிப்பைச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. தாம்பத்தியம்' படத்தில் அம்பிகா, ராதா இருவருமே சிவாஜியுடன் இணைந்து நடித்தார்கள்.

    ராதிகா

    'என் ஆசை ராசாவே' படத்தில் ராதிகாவும், 'இருமேதைகள்' படத்தில் சரிதாவும் ஜோடியாக நடித்தனர். 'பைலட் பிரேம்நாத்' படத்தில் இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஜோடியாக நடித்தார்.

    வீரபாண்டியன்' படத்தில் சுமித்ராவும், 'முதல் மரியாதை,' சின்னமருமகள்', 'படிக்காதவன்', 'என்தமிழ் என்மக்கள்' போன்ற படங்களில் வடிவுக்கரசியும் சிவாஜியின் மனைவி பாத்திரத்தில் நடித்தனர்.

    எத்தனையோ சிவாஜி படங்களில் காமெடி வேடத்தில் நடித்த மனோரமா, 'ஞானப் பறவை' என்ற ஒரே படத்தில் சிவாஜியின் ஜோடியாக நடித்தார்.

    'இமயம்', 'நாங்கள்' படத்தில் ஸ்ரீவித்யா ஜோடியாக நடித்தார்.

    சிவாஜி கடைசியாக நடித்த படம் படையப்பா. அதில் அவரது ஜோடி லட்சுமி.

    நூற்றாண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில், சிவாஜி களத்திலிருந்தபோது உச்சம் தொட்ட நடிகைகள் அனைவருமே அவருக்கு ஜோடியாக நடித்தவர்களே. அந்தளவிற்கு அனைவருடனும் இணைந்து நடித்து சாதனைப் படைத்தவர் நடிகர் திலகம்!

    -தொடரும்...

    English summary
    Here is the list of late legend Sivaji Ganesan's heroines in his movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X